ஜெ. இறுதி நிகழ்ச்சிக்கு திமுகவிலிருந்து யார் வந்தார்கள்.. நடிகர் ரஜினிக்கு தம்பிதுரை கேள்வி!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இறுதி நிகழ்ச்சிக்கு திமுகவில் யார் வந்தார்கள் என ரஜினிக்கு தம்பிதுரை கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video
கரூர்: கருணாநிதியின் இறுதி நிகழ்ச்சிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வந்திருக்க வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியிருந்த நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இறுதி நிகழ்ச்சிக்கு திமுகவில் யார் வந்தார்கள் என அதிமுகவைச் சேர்ந்த லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை கேள்வி எழுப்பியுள்ளார்.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்துவதற்கு நடிகர் சங்கம் ஏற்பாடு செய்த அஞ்சலிக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், கருணாநிதியின் உடல் அடக்கம் செய்வதற்கு மெரினாவில் இடம் கிடைக்காமல் போயிருந்தால் நானே வீதியில் இறங்கிப் போராடியிருப்பேன். கருணாநிதியின் இறுதி நிகழ்ச்சிக்கு தமிழக முதல்வர் கலந்துகொண்டிருக்க வேண்டும் என்று கூறினார்.
இந்நிலையில், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை கரூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், "ரஜினிகாந்த் அரசியலுக்கு இன்னும் வரவில்லை. அவர் முழுமையாக அரசியலுக்கு வரட்டும். அதன் பிறகு அவரது விமர்சனத்திற்கு பதில் கூறலாம். இப்போது அவரது தனிப்பட்ட கருத்துக்கு பதில் கூற விரும்பவில்லை.
திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு தமிழக அரசு உரிய மரியாதை அனைத்தும் செய்து உள்ளது. இதில் யாரும் குறை சொல்ல முடியாது. கருணாநிதிக்கு முதல்வர், துணை முதல்வர் மற்றும் நான் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினோம். எம்ஜிஆர் ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்ட போது யார் அங்கு வந்தார்கள், இருந்தார்கள்? எனவே பொத்தாம் பொதுவாக குறை சொல்லக்கூடாது
மெரினாவில் இடம் தர அரசு மறுக்க காரணம் எம்ஜிஆர் மற்றும் அண்ணா, ஜெயலலிதா சமாதியை அகற்ற வேண்டும் என பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நீதிமன்றத்தில் இருந்தது. இந்த சட்ட சிக்கல் காரணமாக தான் மறுக்கப்பட்டது. அதனால், நீதிமன்றம் மூலம் தீர்வு காணப்பட்டது.
கருணாநிதிக்கு கொடுக்கப்பட வேண்டிய மரியாதை அனைத்தும் தமிழக அரசால் வழங்கப்பட்டது. இதை யாரும் அரசியல் ஆக்க கூடாது. இதை அரசியல் ஆக்குவது தேவையற்றது" என்று கூறினார்.