போட்டிக்கு நாங்களும் சந்திப்போம்ல.. தேர்தல் ஆணையரிடம் அவசர அவசரமாக தேதி கேட்கும் தம்பிதுரை
சசிகலா ஆதரவு எம்பியான தம்பிதுரை நாளை தேர்தல் ஆணையரை சந்திக்க உள்ளார். ஓபிஎஸ் அணியினர் இன்று அவரை சந்தித்து சசிகலா பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டது குறித்து விளக்கம் அளித்துள்ள நிலையில் இந்த அவசர
சென்னை: தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியை நேரில் சந்திக்க லோக் சபா துணை சபாநாயகர் தம்பிதுரை நேரம் கேட்டுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சசிகலா பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியை சந்தித்தனர்.
அப்போது, சசிகலா பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லாது என்பது குறித்து ஓபிஎஸ் அணியினர் விளக்கினார்கள். மேலும், இரட்டை இலை சின்னம் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
வரும் 20ம் தேதி…
இதனையடுத்து, வரும் 20ம் தேதி சசிகலா பொதுச் செயலாளராக நியமனம் செய்த விவகாரம் தொடர்பாக முடிவெடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆக, சசிகலாவின் பொதுச் செயலாளர் பதவி பறிபோகுமா நீடிக்குமா என்பது விரைவில் தெரிய வரும்.
அவசர சந்திப்பு
இந்நிலையில், லோக் சபா துணை சபாநாயகரும் சசிகலா ஆதரவு எம்பியுமான தம்பிதுரை, அவசர அவசரமாக தலைமை தேர்தல் ஆணையரை சந்திக்க நேரம் ஒதுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அவருடன் நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட சசிகலா ஆதரவு எம்பிகள் உடன் சென்று நஜீம் ஜைதியை சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.
நேரம் ஒதுக்கவில்லை..
லோக் சபா எம்பி தம்பிதுரை, தேர்தல் ஆணையரை சந்திக்க நேரம் கேட்டிருந்தாலும், இன்னும் ஆணையத்திடம் இருந்து நேரம் ஒதுக்கி பதில் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தொடர் முயற்சியில் தம்பிதுரை ஈடுபட்டுள்ளார்.
இரட்டை இலை
எந்த வேட்பாளர் என்று பார்க்காமல் இரட்டை இலை சின்னத்தைப் பார்த்த உடன் ஓட்டு போடுபவர்கள் ஆர்.கே. நகர் தொகுதி மக்கள். இந்நிலையில், ஓபிஎஸ் அணியினர் மற்றும் சசிகலா அணியினர் இருவருக்குமே இரட்டை இலை சின்னம் அவசியமாக உள்ளது. எனவேதான் இரு தரப்புமே அடுத்தடுத்து தேர்தல் ஆணையரை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.