அதிமுக, பாஜகவிற்கு ஒரு இடம் கூட கிடைக்காது.. தமிழகத்தின் தனிப்பெரும் கட்சியாகும் திமுக.. சர்வே!
2019 லோக் சபா தேர்தலில் தமிழகத்தில் அனைத்து தொகுதியிலும் திமுக - காங்கிரஸ் கூட்டணிதான் வெல்லும் என்று நேற்று வெளியான கருத்து கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Recommended Video
டெல்லி: 2019 லோக் சபா தேர்தலில் தமிழகத்தில் அனைத்து தொகுதியிலும் திமுக - காங்கிரஸ் கூட்டணிதான் வெல்லும் என்று நேற்று வெளியான கருத்து கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
லோக் சபா தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று நேற்று வெளியான கருத்து கணிப்புகளில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. மாநில கட்சிகள் எந்த கட்சிக்கு ஆதரவு அளிக்குமோ அந்த கட்சிதான் அடுத்த முறை ஆட்சி அமைக்கும் என்று தெரிகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் இந்த தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று ஏபிபி சி வோட்டர் சர்வே, இந்தியா டுடே கார்வி இன்சைட்ஸ் சர்வே, ரிபப்ளிக் டீவி சர்வேயில் கூறப்பட்டு இருக்கிறது.
ரிபப்ளிக் டீவி சர்வே என்ன
ரிபப்ளிக் டீவியின் கருத்து கணிப்பின்படி தமிழகத்தில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி ஒரு தொகுதியில் கூட வெல்லாது. காங்கிரஸ் - திமுகவின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி 40 (புதுச்சேரி 1) தொகுதிகளை வெல்லும். மற்ற சிறிய (திமுக காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெறாத கட்சிகள்) கட்சிகள் எங்குமே வெற்றி பெறாது.
என்ன சதவிகிதம்
ரிபப்ளிக் டீவியின் கருத்து கணிப்பின்படி தமிழகத்தில் மொத்தம் 30 முதல் 31 இடங்களில் திமுக + சிறிய கூட்டணி கட்சிகள் வெல்லும். 9 இடங்களில் காங்கிரஸ் வெல்லும் என்று கூறப்பட்டு இருக்கிறது. காங்கிரஸ் - திமுகவின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி 40 இடங்களை கைப்பற்றும். இந்த கூட்டணியின் மொத்த வாக்கு சதவிகிதம் 44% ஆக இருக்கும் என்று கூறப்பட்டு இருக்கிறது.
ஏபிபி சி வோட்டர் சர்வே என்ன
ஏபிபி சி வோட்டர் சர்வேயிலும் இதேதான் கூறப்பட்டு இருக்கிறது. லோக் சபா தேர்தலில் திமுகதான் மொத்தமாக வெற்றிபெறும். அதாவது திமுக - காங்கிரஸ் - சிறிய கட்சிகளின் கூட்டணி மொத்தம் 40 இடங்களில் வெல்லும். பாஜக - அதிமுக கூட்டணி அமைத்தாலும், அமைக்கவிட்டாலும் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியாது என்று ஏபிபி சி வோட்டர் சர்வே கூறியுள்ளது.
இந்தியா டுடே கார்வி இன்சைட்ஸ் என்ன
இந்தியா டுடே கார்வி இன்சைட்ஸ் கருத்து கணிப்பின்படி தென்னிந்தியாவில் அதிக இடங்களை காங்கிரஸ் கட்சிதான் வெல்லும். கேரளா, ஆந்திரா, கர்நாடகா என்று அனைத்து மாநிலத்திலும் கணிசமான இடங்களை காங்கிரஸ் வெல்லும். தமிழகத்தை பொறுத்தவரை 40 இடங்களையும் திமுக - காங்கிரஸ் கூட்டணிதான் பெறும் என்று கூறப்பட்டு இருக்கிறது.
எல்லோரும் ஒரே முடிவு
அனைத்து கருத்து கணிப்பின் முடிவிலும் 2019 லோக் சபா தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணிதான் வெற்றிபெறும் என்று கூறப்பட்டுள்ளது. அனைத்து கணிப்புகளும் சொல்லி வைத்தார்போல 40 இடங்களிலும் திமுக வெல்லும் என்று கூறி இருக்கிறது. பாஜக - அதிமுக கூட்டணி வைத்தாலும் இதே முடிவுதான் வரும் என்றும் கூறப்பட்டு இருக்கிறது.
பெரிய கட்சி
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் திமுக 30+ இடங்களை தனியாக பெறும் பட்சத்தில் லோக் சபா மூன்றாவது பெரிய கட்சியாக மாற வாய்ப்புள்ளது. தற்போது அதிமுகதான் லோக் சபாவில் மூன்றாவது பெரிய கட்சி. அந்த இடத்தை திமுக பெற்று சாதனை படைக்க வாய்ப்புள்ளது. கருத்து கணிப்புகள் பலிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.