லோக்சபா தேர்தல்: தஞ்சையை குறிவைக்கும் டி.ஆர்.பாலு- கொதிக்கும் பழனிமாணிக்கம்
சென்னை: தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட திமுக முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலு கட்சியின் தலைமைக் கழகத்தில் விருப்ப மனு தாக்கல் செய்த சம்பவம் அக்கட்சியின் மற்றொரு பிரிவினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாம்.
விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து விருப்ப மனுக்களை திமுக கட்சித் தலைமை பெற்று வருகிறது.
தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட திட்டமிட்டு கடந்த சில ஆண்டுகளாக திமுக முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலு காய் நகர்த்தி வந்தார். இந்த நிலையில் திமுக நாடாளுமன்ற கட்சித் தலைவரான டி.ஆர்.பாலு தனது சொந்த ஊரான மன்னார்குடி அமைந்துள்ள தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தார்.
இந்த தகவல் அறிந்த அத்தொகுதியின் எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான பழனிமாணிக்கம் மற்றும் அரவது ஆதரவாளர்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளார்களாம்.
மேலும், தஞ்சை தொகுதிக்கு டி.ஆர். பாலு விருப்ப மனு அளித்த தகவல் கிடைத்ததும் பழனிமாணிக்கம் திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்து பேசியுள்ளார். அப்போது அவர் பாலு விருப்ப மனு தாக்கல் செய்த தகவல்கள் குறித்து சில சம்பவங்களை கூறியதாக அரசியல் வட்டாரத்தில் தகவல்கள் பரவி வருகின்றது.