கருத்து வேறுபாடுகள் களையப்படும்... தம்பிதுரை நம்பிக்கை
கரூர்: அதிமுகவில் உள்ள கருத்து வேறுபாடுகள் களையப்பட்டு விரைவில் இரு அணிகளும் ஒன்று சேரும் என்று லோக்சபா சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார்.
கரூரில் ஜிஎஸ்டி குறித்து தொழிலதிபர்கள் ஏற்பாடு செய்த கருத்தரங்கத்துக்கு தம்பிதுரை வருகை தந்தார். அப்போது கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், ஜிஎஸ்டியால் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் குறித்தும், இதனால் பாதிக்கப்படும் தொழில்கள் குறித்து நாடாளுமன்றத்தில் நிச்சயம் குரல் எழுப்புவேன்.
இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் இன்று அதிமுக ஆட்சி கவிழ வேண்டும் என்று நினைக்கிறார்கள்.இது சரியில்லை. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணைவார்கள்.
இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற நாங்கள் ஒற்றுமையாக தான் உள்ளோம். எங்களுக்குள் கருத்து வேறுபாடு உள்ளது. இது விரைவில் களைய வேண்டும் என்பதே என்னுடைய கோரிக்கை என்றார் அவர்.