40 தொகுதிகளுக்கும் விருப்ப மனு வாங்கும் தமிழக காங்கிரஸ்: ஜி.கே.வாசன், ப.சிதம்பரம் போட்டியிட மனு
சென்னை: காங்கிரஸ் கட்சி சார்பில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து நேற்று முதல் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.
தங்களை எந்தக் கட்சியும் கூட்டணியில் சேர்க்கப் போவதில்லை என்பது தெளிவாகிவிட்டதால் 40 தொகுதிகளுக்கும் விருப்ப மனு பெறப்படுகிறது. இதனால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் அதிமுக, திமுக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சியினர் தொண்டர்களிடம் விருப்ப மனு வாங்குதல், நேர்காணல் நடத்துதல் என்று கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பிலும் திங்கட்கிழமை முதல் விருப்பமனு வாங்கப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நேற்று மாலை 4 மணிக்கு 40 தொகுதிக்கும் விருப்பமனு வழங்கப்பட்டது. விருப்பமனுவை வாங்கி, பூர்த்தி செய்து கொடுக்க ஏராளமான தொண்டர்கள் அங்கு குவிந்தனர்.
விருப்ப மனுக்களை பெறுவதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர்கள் தணிகாசலம், சிரஞ்சீவி, ராஜேந்திரன் உள்ளிட்டோர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருந்தது. இந்த குழுவினர் தொண்டர்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர். பொது தொகுதிக்கு விண்ணப்பமாக ரூ.10 ஆயிரம் கட்டணமும், தனித்தொகுதி மற்றும் மகளிருக்கு ரூ.5 ஆயிரமும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
ஜெயந்தி நடராஜன்
முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட வலியுறுத்தி அவரது ஆதரவாளர்களான சாய்லட்சுமி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் ராஜேந்திரன், வேலுத்தேவர் உள்ளிட்ட 15 பேர் விருப்பமனு கொடுத்தனர்.
ஜி.கே.வாசன் -பா.சிதம்பரம்
தென் சென்னையில் ஜி.கே.வாசன், மத்திய சென்னையில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், சிவகங்கை மற்றும் தென்சென்னை தொகுதியில் ப.சிதம்பரமும் போட்டியிட மனு அளிக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் திருநாவுக்கரசர்
திண்டுக்கல்லில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் ஞானதேசிகன், திருச்சியில் திருநாவுக்கரசரும் போட்டியிடக்கோரி அவரது ஆதரவாளர்கள் விருப்பமனு கொடுத்தனர்.
300 மனுக்கள் விற்பனை
நேற்று ஒரு நாளில் மட்டும் சுமார் 300 விருப்பமனுக்கள் பெறப்பட்டது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் பலமான அணியை அமைத்திருந்தது. தற்போது காங்கிரஸ் கூட்டணியில் தமிழகத்தில் எந்த கட்சியும் இடம் பெறவில்லை.
ஆகவே காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுமா? அல்லது கூட்டணி அமைத்து போட்டியிடுமா? என்பது கேள்விகுறியாக உள்ளது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சி தி.மு.க.வுடன் மீண்டும் இணைந்து தேர்தலை சந்திக்கவும், அந்த கூட்டணியில் தே.மு.தி.க.வை இடம் பெற செய்வதற்கான முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தலைமை முடிவு செய்யும்
காங்கிரஸ் கட்சி சார்பில் வழங்கப்பட்ட விருப்பமனுவில், எந்த ஆண்டு கட்சியில் சேர்ந்தீர்கள்? காங்கிரஸ் கட்சிக்காக சிறை சென்றது உண்டா? தேர்தலில் போட்டியிட்டது உண்டா? உள்ளிட்ட கேள்விகள் இடம் பெற்றிருந்தது.
இதற்கிடையே இன்றுடன்(செவ்வாய்க்கிழமை)யுடன் விருப்பமனு வாங்குதல் முடிவடைகிறது. அதனை தொடர்ந்து விருப்பமனுக்கள் அனைத்தும் மத்திய காங்கிரஸ் தலைமைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.