29 வயது இளைஞர் 70 வயது பாட்டியான கதை... தொடரும் ஸ்மார்ட் கார்டு அட்ராசிட்டிஸ்!
தமிழக அரசின் ஸ்மார்ட் கார்டில் 29 வயது இளைஞரின் படத்துக்கு பதிலாக 70 வயது பாட்டியின் படம் இடம்பெற்றுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம்: 29 வயது இளைஞருக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டில் 70 வயது பாட்டியின் படம் இடம்பெற்றுள்லது ஸ்மார்ட் கார்டு திட்டத்தில் குழப்பம் ஏற்பட்டு வருவதையே காட்டுகிறது.
நீண்ட நாள்களாக ரேஷன் கார்டு புதிதாக வழங்கப்படாமல் உள்தாள் ஒட்டியே புதுப்பிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது.
அதன்படி படிப்படியாக ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டு வருகின்றன. அதில் பெரும்பாலும் பெயர், முகவரி, பாலினம் உள்ளிட்ட தவறு என்று புகார் கூறப்படும். ஆனால் சமீபகாலங்களில் போட்டோவே மாறி போயுள்ளது.
தொடர்ந்து குளறுபடிகள்
சேலம் மாவட்டம் , ஒமலூரை சேர்ந்த பயனாளி சரோஜா பெரியதம்பிக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டில் காஜல் அகர்வாலின் படம் இடம்பெற்றிருந்தது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள், தருமபுரி, போசிநாயக்கன் அள்ளியைச் சேர்ந்த மகேஷ் என்பவருக்கு செருப்புக் கால் அணிந்த புகைப்படம் அச்சிடப்பட்ட ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்பட்டது.
விநாயகர் படம், தேசியக் கொடி
இதேபோல் உடுமலைபேட்டையிலும், பழனியிலும் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டில் விநாயகர் படமும், தேசியக் கொடியும் இடம்பெற்றுள்ளது. தற்போது வழங்கப்பட்டு வரும் ஸ்மார்ட் கார்டில் பெரும்பாலும் குளறுபடிகள் அதிகரித்த வண்ணம் உள்ளன.
இளைஞருக்கு அதிர்ச்சி
சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த அனுப்பூர் மேலக்காடு பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார்(29). இவருக்கு 2 நாளுக்கு முன்பு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டது. பெயர், விலாசம் அனைத்தும் சரியாக உள்ளது என சந்தோஷப்பட்ட நிலையில் அதிர்ச்சி காத்திருந்தது.
பாட்டியின் படம்
29 வயது இளைஞரின் படத்துக்கு பதிலாக 70 வயது மூதாட்டியின் படம் இடம்பெற்றிருந்தது. இதுகுறித்து அதிகாரிகளிடம் விக்னேஷ்குமார் கேட்டபோது, ஸ்மார்ட் கார்டில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்துள்ளன. எனவே விலாசம், படம் மாறியிருந்தால் இணையதளத்திலோ அல்லது இசேவை மையங்களுக்கோ சென்று சரி செய்துவிடலாம். எனவே அவ்வாறு சரி செய்து கொள்ளுங்கள் என்று விக்னேஷ்குமாரிடம் தெரிவித்துள்ளனர்.