சபரிமலை ஐயப்பன் கோவிலில் மனமுருக அரிவராசனம் பாடிய யேசுதாஸ்... வைரலாகும் வீடியோ
சென்னை: சபரிமலை ஐயப்பன் கோவிலில் வழிபட்ட யேசுதாஸ் மனமுருக அரிவராசனம் பாடலை பாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கிறிஸ்தவராக இருந்தாலும் சபரிமலை ஐயப்பன் மீது அளவுகடந்த பக்தி கொண்டவர் பாடகர் யேசுதாஸ். சபரிமலைக்கு பாதயாத்திரை செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார் யேசுதாஸ்.
சபரிமலையில் இரவில் நடைசாத்தப்படும் போது யேசுதாஸ் பாடிய அரிவராசனம் பாடல் ஒலிபரப்பப்படும். அதாவது சுவாமி ஐயப்பனை தூங்க வைக்கும் பாடலாக இது போற்றப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக யேசுதாஸ் ஐயப்பன் கோவிலுக்கு செல்லாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னர் ஐயப்பன் பம்பை வழியாக பாதையாத்திரையாக ஐயப்பன் கோவிலுக்கு சென்றார்.
அவர் ஐயப்பனை வழிபட சென்ற போது இரவு நடைசாத்தும் நேரமாகிவிட்டது. இதனால் வழக்கமாக யேசுதாஸின் அரிவராசனம் பாடலை ஒலிபரப்பாமல் அவரையே சந்நிதியில் பாட கேட்டுக் கொண்டனர்.
இதையடுத்து யேசுதாஸும் ஐயப்பன் சந்நிதானம் முன்பாக நின்று மனமுருக அரிவராசனம் பாடலை பாடினார். பின்னர் சம்பிரதாயங்களின்படி இரவு நடை சாத்தப்பட்டது. யேசுதாஸ் அரிவராசனம் பாடும் வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.