மணல் கொள்ளை லாரிகள்... மடக்கி பிடித்த நெல்லை பொது மக்கள்!
நெல்லையில் லாரிகள் மூலம் திருட்டுத்தனமாக மணல் அள்ளியவர்களை அப்பகுதி மக்கள் மடக்கி பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை: நெல்லையில் திருட்டுத்தனமாக மணல் அள்ளிய லாரிகளை பொதுமக்கள் சிறை பிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தாமிரபரணி பாசன அணைக்கட்டு மருகால் மேலகாலில் முதல் பாசன குளமாக குட்டைக்கால் குளம் இருந்து வருகிறது. இந்த குளத்தில் எடுக்கப்படும் மண் செங்கல் சூளைக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது.
இதற்காக விதிகளின் பேரில் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்றிருந்த போதும் அதை மீறும் வகையில் மண் அள்ளுவதாக புகார்கள் எழுந்தன. குறிப்பிட்ட சில இடங்களில் ஆழமாக தோண்டி மண் எடுப்பதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக கிராம மக்களும், விவசாயிகளும் அதிகாரிகளிடம் முறையிட்டும் கண்டு கொள்ளவில்லை. இதனால் ஆவேசம் அடைந்த கிராம மக்கள் ஊர் தலைவர் வேல்முருகன் தலைமையில் ஆலோசனை நடத்தினர்.
அப்போது லாரிகள் குளத்தில் மண் அள்ளி கொண்டிருப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற அவர்கள் மண் அள்ளிய லாரிகளை சிறை பிடித்தனர்.
தகவல் அறிந்த முறப்பநாடு போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மக்களை சமாதானப்படுத்தினர். தொடர்ந்து நடந்த பேச்சுவார்தையில் விதிமுறைகளை மீறி நடக்க கூடாது எச்சரிக்கை செய்யப்பட்டது. இதில் சுமூக தீர்வு ஏற்பட்டதை அடுத்து கிராம மக்கள் லாரிகளை விடுவித்தனர்.