மார்ச் 30 முதல் லாரிகள் ஸ்டிரைக்... இன்று முதல் லாரி சரக்கு புக்கிங் நிறுத்தம்
டீசல் மீதான வாட் வரி உயர்த்தப்பட்டதைக் கண்டித்து வரும் மார்ச் 30-ஆம் தேதி முதல் 5 மாநிலங்களில் லாரிகள் வேலைநிறுத்தம் செய்வதால், சரக்குகளை ஏற்றுவதற்கான புக்கிங் இன்று முதல் நிறுத்தப்பட்டது.
சேலம்: டீசல் மீதான வாட் வரி உயர்வைக் கண்டித்து லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதால், இன்று முதல் லாரியில் சரக்குகளை புக்கிங் செய்வது நிறுத்தப்பட்டது.
இன்சூரன்ஸ் கட்டணம், டீசல் மீதான வாட் வரி, 15 ஆண்டுகள் பழைமையான வாகனங்கள் பயன்படுத்த மத்திய அரசின் தடை உத்தரவு ஆகிய விவகாரங்களை கண்டித்து தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், கேரளம் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 50 லட்சம் லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளது.
தமிழகத்தில் மட்டும் 12 லட்சம் லாரிகள் ஓடாது என்று தென் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளம் தெரிவித்துள்ளது. இதனால் லாரிகளில் சரக்கு ஏற்றுவதற்காக செய்யப்படும் புக்கிங் இன்று முதல் நிறுத்தப்படுகிறது.
இதுகுறித்து சேலத்தில் தமிழ்நாடு சரக்கு லாரி புக்கிங் சம்மேளனத் தலைவர் ராஜ வடிவேலு கூறுகையில், லாரிகளின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் இன்று முதல் சரக்கு புக்கிங் நிறுத்தப்படுகிறது. இதனால் ரூ.5000 கோடி மதிப்பிலான சரக்குகள் தேக்கம் அடையும் அபாய நிலை உள்ளது என்று அவர் தெரிவித்தார்.