டயர் வெடித்து தாறுமாறாக ஓடி ரயில்வே மேம்பாலத்தில் சிக்கி அந்தரத்தில் தொங்கிய லாரி....!
விருதுநகர்: விருதுநகர் அருகே ரயில்வே மேம்பாலத்தில் மோதிய லாரி அந்தரத்தில் தொங்கியது. கிரேன்கள் வரவழைக்கப்பட்டு லாரியில் இருந்த நோட்டு, புத்தகங்கள் இறக்கப்பட்டு லாரியை மீட்டனர்.
ஹைதராரபாத்திலிருந்து திருநெல்வேலிக்கு நோட்டு புத்தகங்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று விருதுநகர் வழியாக சென்று கொண்டிருந்தது. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள ரயில்வே மேம்பாலத்தில் வந்த போது, லாரியின் டயர் திடீரென வெடித்தது.
இதனால் நிலை தடுமாறிய லாரி ரயில்வே மேம்பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சுற்றுச்சுவர் இடிந்தால் லாரி ரயில்வே மேம்பாலத்தில் தொங்கியது. லாரியை ஓட்டி வந்த ஓட்டுனர் செல்வம் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
இதனையடுத்து அவ்வழியாக சென்ற பொதிகை ரயில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, பின்பு குறைந்த வேகத்தில் பாலத்தை கடந்தது.
இந்நிலையில் செங்கோட்டையில் இருந்து காலை 7மணிக்கு புறப்பட்ட மதுரை பயணிகள் ரயில் மதுரைக்கு செல்லாமல் சிவகாசியில் நிறுத்தப்பட்டு அங்கிருந்து திருப்பி தாமதத்தோடு அனுப்பபட்டுள்ளது.
மதுரையில் இருந்து செங்கோட்டைக்கு வரும் பயணிகள் ரயிலும் செங்கோட்டைக்கு வராததால் செங்கோட்டையில் இருந்து பகல் 12மணிக்கு மதுரை புறப்பட வேண்டிய பயணிகள் ரயில் வராததால் சிவகாசியில் இருந்து திருப்பப்பட்டுள்ள ரயில் வந்த பின்னரே சுமார் மதியம் 2மணிக்கு மீண்டும் பயணிகள் ரயில் இயக்கப்படும் என்று கூறப்பட்டது. இதன்காரணமாக மதுரை செல்ல ரயில் நிலையத்தில் காத்திருந்த பயணிகள் பேருந்துக்களை பிடித்து ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.
நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பின் நவீன கிரேன்கள், இராட்சத கிரேன்கள் கொண்டு வரப்பட்டு ரயில்வே பாதையிலும்,சாலையில் கொண்டுவந்து நிறுத்தப்பட்டு லாரியில் இருந்த நோட்டு புத்தகங்கள் இறக்கப்பட்டு பின்னர் லாரி பாதுகாப்பை அப்புறப்படுத்தப்பட்டது. அதன் பின் ரயில் போக்குவரத்து தொடங்கியது.