டயர் வெடித்து சாக்கடைக்குள் விழுந்த லாரி... இருவர் பலி... - வீடியோ
அந்தியூரில் அதிக எடைகொண்ட மரக்கட்டைகளை ஏற்றி வந்த லாரி, டயர் வெடித்து சாக்கடைக்குள் விழுந்ததால் இருவர் மரணமடைந்தனர். 6 பேர் படுகாயமடைந்தனர்.
ஈரோடு: ஈரோடு மாவட்டம் அந்தியூரில் மரக்கட்டைகளை ஏற்றி வந்த லாரி, பாரம் தாங்காமல் டயர் வெடித்து சாக்கடைக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு பேர் மரணமடைந்தனர். 6 பேர் பலத்த காயமடைந்தனர்.
அதிக அளவு எடை உள்ள மரக்கட்டைகளை லாரியில் ஏற்றி, காங்கேயத்திலிருந்து அந்தியூர் கொண்டு சென்றுள்ளனர். அப்போது, அந்தியூரை நெருங்கும்போது, எடை தாங்காமல் லாரியின் முன்பக்க டயர் வெடித்தது.
இதனால், லாரி கட்டுப்பாட்டை இழந்து, 10 அடி ஆழமுள்ள சாக்கடைக்குள் விழுந்தது. இதில் மரக்கட்டைகளின் மேல் அமர்ந்து வந்த பழனிச்சாமி மற்றும் விஸ்வநாதன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், 6 பேர் பலத்த காயமடைந்தனர்.
காவல்துறையினர், இந்த விபத்தை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு லாரியில் எத்தனை டன் எடை ஏற்ற வேண்டும் என்கிற விதிமுறைகளை பின்பற்றாத காரணத்தால்தான் இம்மாதிரியான விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.