கர்நாடகத்திற்கு லாரிகளை இயக்காதீர்கள்.. லாரி உரிமையாளர் சம்மேளனம் உத்தரவு #TNNeedsKaveri
நாமக்கல்: கர்நாடகத்தில் தமிழக பதிவெண் கொண்ட லாரிகள் தாக்கி சூறையாடப்பட்டதால் கர்நாடகத்திற்கு லாரிகளை அனுப்ப வேண்டாம் என்று தமிழ்நாடு லாரிகள் மற்றும் டிப்பர் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தனது உறுப்பினர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகத்தில் நிலைமை சீராகும் வரை லாரிகளை அனுப்ப வேண்டாம் என்றும் சம்மேளனம் உத்தரவிட்டுள்ளது.
காவிரியிலிருந்து தமிழகத்திற்குத் தண்ணீர் தருவதை கண்டித்தும், எதிர்த்தும் அங்கு போராட்டம் நடந்து வருகிறது. தமிழகத்திலிருந்து செல்லும் தமிழகப் பதிவெண் கொண்ட வாகனங்களை போராட்டக்காரர்கள் தாக்கி சூறையாடி வருகின்றனர். குறிப்பாக லாரிகள்தான் இவர்களின் முக்கிய இலக்காக உள்ளது.
லாரிகளைத் தாக்கி கண்ணாடிகளை உடைப்பது, டயர்களை தீவைத்து எரிப்பது என்று போராட்டக்காரர்கள் அட்டகாசம் செய்து வருகின்றனர். மண்டியாவில் பல இடங்களில் தமிழகப் பதிவெண் கொண்ட வாகனங்கள் தாக்கப்பட்டுள்ளன. கர்நாடகத்தின் காவிரி பாசனப் பகுதிகளில் மண்டியா மாவட்டம்தான் அதிக அளவிலான தண்ணீரைப் பயன்படுத்துகிறது என்பதால் இங்குதான் எப்போதுமே போராட்டத்தில் வன்முறை அதிகமாக இருக்கும்.
இந்த நிலையில் போராட்டத்தில் வன்முறையும் கலந்திருப்பதால் கர்நாடகத்திற்கு லாரிகளை இயக்க வேண்டாம் என்று தனது உறுப்பினர்களுக்கு நாமக்கலில் உள்ள தமிழ்நாடு லாரிகள் மற்றும் டிப்பர் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் உத்தரவிட்டுள்ளது.