டீசல் விலை உயர்வு: லாரி வாடகையை உயர்த்தப்போகும் உரிமையாளர்கள்- காய்கறிகள் விலை விர்ர்..
சென்னை: டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில், லாரி உரிமையாளர்கள் கி.மீ.க்கு 75 பைசா உயர்த்த முடிவு செய்துள்ளனர். இதனால் அரிசி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அது என்ன மாயமோ மந்திரமோ தெரியவில்லை டீசல் விலை லேசாக உயர்ந்தாலே லாரி வாடகை உயர்ந்துவிடும். ஹோட்டல்களில் உணவுப்பண்டங்களில் விலை உயர்ந்துவிடும். ஆட்டோ ஓட்டுநர்கள் வாடகைகளை கிலோமீட்டருக்கு வாடகையை உயர்த்தி விடுவார்கள்.
அதேசமயம் டீசல் விலையை குறைக்கும் போது மட்டும் மேற்படியார்கள் எல்லாம் விலையை குறைக்கமாட்டார்கள். கேட்டால் அவங்களை குறைக்கச் சொல்லுங்க நாங்க குறைக்கிறோம் என்று கூறுவார்கள்.
கடந்த 6 மாத காலத்தில் டாலருக்கு நிகராக கச்சா எண்ணெய் விலை குறைந்ததை அடுத்து பலமுறை டீசல் கட்டணம் குறைக்கப்பட்டது.
டீசல் விலை
2014 அக்டோபர் 18ஆம் தேதி, டீசல் விலையில், லிட்டருக்கு, 3.37 ரூபாயை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்தன. தொடர்ந்து, அக்டோபர் 31ல், 2.25 ரூபாய் குறைக்கப்பட்டது. இதன்பின், படிப்படியாகக் குறைந்து, லிட்டர், 49.58 ரூபாய் என்ற நிலைக்கு விற்கப்பட்டது.
அதிரடி உயர்வு
இந்த சூழலில், சனிக்கிழமை நள்ளிரவு முதல், டீசல் விலை லிட்டருக்கு, 3.09 ரூபாய் உயர்ந்தது. இதையடுத்து, தற்போது சென்னையில், ஒரு லிட்டர் டீசல் விலை, 52.92 ரூபாயாக உயர்ந்து உள்ளது.
லாரி வாடகைக் கட்டணம்
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.46 காசும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.34 காசும் உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, எரிபொருள் செலவை ஈடுசெய்ய முடியாத நிலையில் கி.மீ.க்கு 75 பைசா உயர்த்த லாரி உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
5 லட்சம் சரக்கு லாரிகள்
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் கே.நல்லதம்பி, ‘‘தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கு காய்கறிகள், அரிசி, பருப்பு, சிமென்ட், பருத்தி, கரும்பு, பருத்தி உட்பட பல்வேறு பொருட்களை ஏற்றிச் செல்ல 5 லட்சத்துக்கும் மேற்பட்ட லாரிகள் தினமும் இயக்கப்படுகின்றன.
நலிவடையும் அபாயம்
கச்சா எண்ணெய் விலை மாற்றம் இல்லாத சூழ்நிலையில் பெட்ரோல், டீசல் விலையேற்றம் ஆச்சரியமாக உள்ளது. ஒரே நேரத்தில் லிட்டருக்கு ரூ.3க்கும் மேல் உயர்த்தியிருப்பது ஏற்கமுடியாதது. ஏற்கெனவே பல்வேறு காரணங்களால் நலிவடைந்துள்ள லாரி தொழில் இந்த டீசல் விலை உயர்வால், மேலும் நலிவடையும் சூழ்நிலை உள்ளது.
கிலோமீட்டருக்கு 75 பைசா
இந்நிலையில், கூடுதல் செலவை ஈடுசெய்யும் வகையில் வாடகையை கி.மீ.க்கு 75 பைசா உயர்த்த முடிவு செய்துள்ளோம் என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவை அறிவிக்கவுள்ளோம்'' என்றும் அவர் கூறியுள்ளார்.
கலால்வரி உயர்வு
இந்த ஆண்டில் ஜனவரி மாதத்தில் இருந்து கலால் வரி 4 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதை வாபஸ்பெற வேண்டுமென வலியுறுத்தினோம். ஆனால், வாபஸ் பெறப்படவில்லை. டீசல் விலை இனியும் உயராது என வாக்குறுதி அளித்தனர். இந்நிலையில், திடீரென டீசல் விலையை உயர்த்தியுள்ளது அதிர்ச்சியாக உள்ளது என்று தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தலைவர் ஆர்.சுகுமாறன் கூறியுள்ளார். எனவே, இழப்பை சரிசெய்ய 5 சதவீதம் வரையில் வாடகை கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்தியாவசியப் பொருட்கள்
லாரிகளின் வாடகை கட்டணம் உயர்த்த லாரி உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளதால், காய்கறிகள், மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.