ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவு - ஜன. 20ம் தேதி லாரிகள் வேலை நிறுத்தம்
தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஜனவரி 20ம் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை லாரிகளை இயக்க மாட்டோம் என்று லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை : உச்சநீதிமன்ற தடை உத்தரவினால் தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவில்லை. பாரம்பரிய விளையாட்டு போட்டியான ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் மாணவர்களும், இளைஞர்களும் கொதித்து எழுந்துள்ளனர்.
சென்னை தொடங்கி நெல்லை வரை போராட்டம் தீவிரமடைந்துள்ளது. சென்னை மெரீனா கடற்கரையில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் இரவு பகலாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வாடிவாசல் திறக்கும் வரை வீடு வாசல் செல்ல மாட்டோம் என்று மாணவர்களும், இளைஞர்களும் கூறி வருகின்றனர். ஜல்லிக்கட்டுக்காக நடைபெறும் போராட்டத்திற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். கடைகளை அடைக்க வணிகர்கள் சங்கத்தினர் ஒத்துக்கொண்டுள்ளனர்.
இதனிடையே ஜனவரி 20ம் தேதியன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை லாரிகளை இயக்கப் போவதில்லை என்று லாரி உரிமையாளர்கள் சம்மமேளனத் தலைவர் அறிவித்துள்ளார். இதே போல மணல் லாரிகளும் வேலை நிறுத்தப் போரட்டத்தில் ஈடுபட உள்ளதாக உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.