நாடு முழுவதும் அக். 1 முதல் லாரி ஸ்டிரைக்... வடமாநிலத்துக்கு சரக்கு போக்குவரத்து நிறுத்தம்
சென்னை : நாடு முழுவதும் அக்டோபர் 1 ம் தேதி முதல் லாரிகள் வேலை நிறுத்தம் தொடங்குவதையடுத்து வட மாநிலங்களுக்கான சரக்கு புக்கிங் நிறுத்தப்பட்டுவிட்டது.
வேலை நிறுத்தத்திற்கு முன்பாகவே தினமும் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள பொருட்கள் தேக்கமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
சுங்கச்சாவடிகளை அகற்றக்கோரியும், ஆண்டுக்கு ஒரு முறை சுங்க கட்டணம் வசூலிக்க வலியுறுத்தியும் நாடு முழுவதும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் லாரிகள் வேலை நிறுத்தம் நடத்தப்படும் என்று அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையிலும் முன்னேற்றம் இல்லை. லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்த கெடு முடிவதற்கு இன்னும் 3 நாள் மட்டுமே இருப்பதால் திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடத்தப்படும் என்றே கூறப்படுகிறது.
வரும் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் 92 லட்சம் சரக்கு வாகனங்கள் இயக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 7 லட்சம் சரக்கு வாகனங்கள் உள்ளன. இதில் 4 லட்சம் லாரிகள் தமிழகத்தில் இருந்து பல்வேறு வெளி மாநிலங்களுக்கு சென்று வருகின்றன.
லாரிகள் வேலை நிறுத்தம் நடைபெற்றால் தினமும் 15 ஆயிரம் கோடி ரூபாக்கும் மேல் இழப்பு ஏற்படும். லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் ஒரு லட்சம் லாரி புக்கிங் ஏஜெண்டுகளும் போராட்டத்தில் பங்கேற்கின்றனர்.
வெளி மாநிலங்களுக்கு சரக்கு புக்கிங் செய்து கொடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் ஏஜெண்டுகளும் பங்கேற்பதால் சரக்கு போக்குவரத்து ஸ்தம்பிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஜவுளி, மஞ்சள், அரிசி, ஜவ்வரிசி, பலவகை எண்ணை, மரப்பொருட்கள், இயந்திர உபகரணங்கள், சிமென்ட், இரும்பு கம்பி உள்பட பல்வேறு பொருட்கள் வட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
தமிழகத்தில் இருந்து சரக்கு செல்லவேண்டுமெனில் குறைந்தபட்சம் 4 நாட்களுக்கு முன்பு சரக்கு புக்கிங் செய்யவேண்டும். குறிப்பட்ட காலத்திற்குள் சென்றடையவேண்டிய பொருட்கள் என்றால் முன்கூட்டியே இங்கிருந்து செல்லவேண்டியிருக்கும். தற்போது லாரி ஸ்டிரைக் 1ம் தேதி அறிவிக்கப்பட்டதால் புக்கிங் நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் விலைவாசி உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதையடுத்து, தமிழக முதல்வர் இது குறித்து தலையிட்டு மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து பிரச்னைக்கு தீர்வு காணவேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.