தமிழகத்தில் லாரி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ்.. அமைச்சருடான பேச்சுவார்த்தையில் உடன்பாடு
தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் 25 லட்சம் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் பல கோடிக்கணக்கான மதிப்பிலான சரக்குகள் தேக்கம் அடைந்துள்ளன. இந்நிலையில் தமிழக அளவில் இந்த போராட்டத்தை வாபஸ் பெறுவத
சென்னை: லாரிகள் வேலைநிறுத்தம் 5-வது நாளாக இன்றும் தொடர்வதால் கோடிக்கணக்கான சரக்குகள் தேக்கம் அடைந்துள்ளன. இன்று போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருடனான இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து லாரி உரிமையாளர்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.
டீசல் மீது தமிழக அரசு விதித்த வாட் வரி, இன்சூரன்ஸ் கட்டண உயர்வு, 15 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்திய வாகனங்களுக்கு மத்திய அரசு தடை உத்தரவு உள்ளிட்டவற்றை கண்டித்து கடந்த 30-ஆம் தேதி முதல் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கமிழகம், தெலங்கானா, ஆந்திரம், கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட 5 மாநிலங்களைச் சேர்ந்த லாரிகள் போராட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால் காய்கறிகள் உள்ளிட்ட பொருள்கள் அழுகி பல கோடிக்கணக்கிலான பொருள்கள் நஷ்டமடைந்துள்ளன. பால், தண்ணீர், மருந்து பொருட்களை ஏற்றி வரும் லாரிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளதால் அந்த லாரிகள் மட்டும் வழக்கம் போல் இயங்கி வருகின்றன.
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் கடந்த 30-ஆம் தேதி லாரி உரிமையாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சுமூக முடிவுகள் எட்டப்படவில்லை. இந்நிலையில் தற்போது மீண்டும் இன்று பிற்பகல் 2 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் பேச்சுவார்த்தை மீண்டும் நடத்தப்பட்டது.
இதில் லாரி உரிமையாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி அளித்துள்ளதால் இந்த போராட்டத்தை தமிழக அளவில் வாபஸ் பெறுவதாக லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.