இன்சூரன்ஸ் கட்டணம்.. தொடரும் இழுபறி.. 6-ஆவது நாளாக தொடரும் லாரிகள் ஸ்டிரைக்!
போக்குவரத்து துறை அமைச்சருடனான பேச்சுவார்த்தையில் திருப்தி அளித்தாலும், தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் 6-ஆவது நாளாக நீடித்து வருவதாக லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை: தமிழக அரசுடனான பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு எட்டப்பட்டாலும் இன்சூரன்ஸ் கட்டண விவகாரத்தில் உடன்பாடு எட்டாததால் தொடர்ந்து 6-ஆவது நாளாக லாரிகள் வேலை நிறுத்தம் தொடர்கிறது.
டீசல் மீது தமிழக அரசு விதித்த வாட் வரி, இன்சூரன்ஸ் கட்டண உயர்வு, வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் கட்டண உயர்வு, 15 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்திய வாகனங்களுக்கு மத்திய அரசு தடை உத்தரவு உள்ளிட்டவற்றை கண்டித்து கடந்த 30-ஆம் தேதி முதல் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கமிழகம், தெலங்கானா, ஆந்திரம், கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட 5 மாநிலங்களைச் சேர்ந்த லாரிகள் போராட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால் காய்கறிகள் உள்ளிட்ட பொருள்கள் அழுகி பல கோடிக்கணக்கிலான பொருள்கள் நஷ்டமடைந்துள்ளன.
பால், மருந்துக்கு விலக்கு
பால், தண்ணீர், மருந்து பொருட்களை ஏற்றி வரும் லாரிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளதால் அந்த லாரிகள் மட்டும் வழக்கம் போல் இயங்கி வருகின்றன.
பேச்சுவார்த்தைகள்
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் கடந்த 30-ஆம் தேதி லாரி உரிமையாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சுமூக முடிவுகள் எட்டப்படவில்லை. இந்நிலையில் தற்போது மீண்டும் நேற்று பிற்பகல் 2 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் பேச்சுவார்த்தை மீண்டும் நடத்தப்பட்டது.
போராட்டம் வாபஸ்
இதில் லாரி உரிமையாளர்களின் 3 கோரிக்கைகளில் 2-ஐ தமிழக அரசால் நிறைவேற்ற முடியும் என்பதால் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி அளித்தார். இதைத் தொடர்ந்து இந்த போராட்டத்தை தமிழக அளவில் வாபஸ் பெறுவதாக லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
ஹைதராபாதில் தோல்வி
இதுகுறித்து தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி கூறுகையில், தமிழக அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தை எங்களுக்கு திருப்தி அளிப்பதாக உள்ளது. இருப்பினும் வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் தொகை 40 சதவீதம் அதிகரிப்பு தொடர்பாக ஹைதராபாத்தில் தென்மாநில லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் மத்திய அரசு அதிகாரிகளுக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது.
போராட்டம் தொடரும்
இந்த வேலைநிறுத்த போராட்டம் தென்மாநில லாரி உரிமையாளர்கள் சங்கத்தால் அறிவிக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. எனவே தன்னிச்சையாக தமிழகத்தில் மட்டும் வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ்பெற முடியாது. தென்மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம். தற்போது அவர்கள் வேலைநிறுத்த போராட்டம் தொடருவதாக அறிவித்துள்ளனர். எனவே தமிழகத்திலும் லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்றார்.
எல்பிஜி டேங்கர் லாரிகள்
எல்பிஜி டேங்கர் லாரிகளும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டால் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்பதால் அந்த லாரிகள் இன்று முதல் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. லாரிகளின் வேலைநிறுத்தத்தால் மத்திய, மாநில அரசுகளுக்கு ரூ.30,000 கோடியும், லாரி உரிமையாளர்களுக்கு ரூ.9,000 கோடியும் நஷ்டமடைந்துள்ளது.