8 நாட்களாக கோடிக்கணக்கில் தங்கிய சரக்குகள்... லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்
8 நாட்களாக நடந்து கொண்டிருந்த லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் இன்று வாபஸ் பெறப்பட்டது.
சென்னை: டீசல் விலை உயர்வு உள்ளிட்டவைக்கு எதிராக தமிழகத்தில் நடந்து வந்த லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் இன்று வாபஸ் பெற்றது.
டீசல் விலை உயர்வு, சுங்கச் சாவடிகளில் அதிக கட்டணம் வசூல் உள்ளிட்டவற்றால் லாரித்தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பெட்ரோல்- டீசல் விலையை குறைத்து ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும். மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் பிரிமியத்தொகை உயர்த்தப்பட்டுள்ளதை குறைக்க வேண்டும்.
சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை குறைத்து ஆண்டுக்கு ஒரு முறை செலுத்துவது போல் வழிவகை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுடெல்லி ஆல் இந்தியா மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ், தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் உள்ளிட்ட சங்கங்கள் ஜூலை 20 தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தன.
அதன்படி லாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன. இதனால் வர்த்தகம் கடுமையாக பாதித்தது. காய்கறிகள், மளிகை சாமான்கள் உள்ளிட்டவை தேங்கியிருந்ததால் கோடிக்கணக்கிலான ரூபாய் வர்த்தகம் முடங்கியது. இதனால் காய்கறி வரத்து குறைந்ததால் விலை ஏறியது.
இந்நிலையில் டெல்லியில் தரைவழிப் போக்குவரத்து துறை செயலர் மலிக்குடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்பட்டது. இதையடுத்து லாரிகள் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக மோட்டார் காங்கிரஸ் நிர்வாகிகள் அறிவத்துள்ளனர்.