இப்படியே எத்தனை நாளைக்கு சாப்பிடுவது? லாரிகளில் சமைக்கும் வெளிமாநில டிரைவர்கள் வேதனை!
லாரிக்குள்ளேயே டிரைவர்கள் சமைத்து சாப்பிடுகிறார்கள்.
Recommended Video
சென்னை: ஸ்டிரைக்கினால் லாரி தொழிலாளர்களும் வெகுவாகவே பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாள்தோறும் ஆயிரக்கணக்கான லாரிகள் நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று வருகிறது. லாரிகளை இயக்குவதில் லட்சக்கணக்கான டிரைவர்கள், கிளீனர்கள், லோடு மேன்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் நாடு முழுவதும் உள்ளனர். அவர்களது வாழ்வாதாரமே இதனை நம்பிதான் உள்ளது.
இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலையை 3 மாதத்துக்கு ஒரு முறை நிர்ணயம் செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய லாரிகள் ஸ்டிரைக் இன்று இரண்டாவது நாளாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதனால் 100 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தேக்கமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஆங்காங்கே லாரிகள் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன.
சரக்கு போக்குவரத்து பாதிப்பு, விலை உயர்வு, போன்றவற்றினால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டாலும் மற்றொரு தரப்பில் லாரி டிரைவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தை சேர்ந்த லாரி டிரைவர்கள் என்றால் பரவாயில்லை. பெரும்பாலானோர் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு தங்குவதற்கு, சாப்பிடுவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால், வெளிமாவட்ட மற்றும் மாநில லாரி டிரைவர்கள் மற்றும் தொழிலாளர்கள் லாரிகளிலேயே உணவு சமைத்து சாப்பிட்டு வருகின்றனர்.
லாரிக்குள்ளேயே ஸ்டவ் உள்ளிட்ட பாத்திரங்களை வைத்து, மளிகை பொருட்களையும் வாங்கி சமைத்து சாப்பிடுகின்றனர். ஆனால் இப்படியே எத்தனை நாளைக்குத்தான் சாப்பிடுவது? பெரும் சிரமமாக உள்ளதாகவும், அரசு உரிய நடவடிக்கை எடுத்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் எனவும் லாரி தொழிலாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.