ஏங்க, என்னால சமைக்க முடியாது.. உச்சாணியில் காய் விலை.. வீடெங்கும் புலம்பல்.. காரணம் லாரி ஸ்டிரைக்!
லாரி ஸ்டிரைக்கினால் காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது.
சென்னை: லாரி ஸ்டிரைக் மட்டுமில்லை எந்த ஸ்டிரைக் தொடங்கினாலும் முதலிலும் கடைசியிலும் பாதிக்கப்படுவது வெகுஜனங்கள்தான். இப்போது லாரி ஸ்டிரைக் நடந்து கொண்டிருக்கிறது. அதிலும் லாரி ஸ்டிரைக் என்றாலே எகிறும் காய்கறிகள் விலையில்தான் மக்களின் தலையில் விழும். அப்படித்தான் இப்போதும் காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது. அதுவும் ராக்கெட் உயரத்திற்கு.
மிகப்பெரிய காய்கறி சந்தையான கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பல்வேறு மாநிலங்களிலிருந்துதான் காய்கறிகள் வரும். அந்த காய்கறிகள் அனைத்தும் தினந்தோறும் லாரிகளில்தான் கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில், எரிபொருள் விலை உயர்வு கட்டுப்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி ஸ்டிரைக் நடத்தி வருகிறார்கள். இன்று அது 3-வது நாளை எட்டியுள்ளது.
காய்கறிகள் லாரிகள் நிறுத்தம்
இதனால் லாரிகள் வரத்து இல்லாத நிலை உருவாகியுள்ளது. அப்படியும் ஒரு சில இடங்களிலிருந்து லாரிகளில் காய்கறிகள் ஏற்றி வந்தாலும், ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ள லாரி நிர்வாகிகள் அதனை வழிமறித்து வந்தவழியே திருப்பி விட்டு விடுகிறார்கள். இதனால் வெளிமாநில, வெளிமாவட்டங்களிலிருந்து வரும் கொஞ்சநஞ்சம் காய்கறிகள்கூட வராமல் போய்விட்டது.
பீன்ஸ் ரொம்ப மோசம்
இதனால் கோயம்பேட்டில் ஏற்கனவே இருப்பில் உள்ள காய்கறிகளை அதிக விலைக்கு வைத்து வியாபாரிகள் விற்பனை செய்து வருகிறார்கள். 1 கிலோ சவ்சவ் 20 ரூபாய் என்றிருந்தது. அது தற்போது 40 ரூபாயாம். அதேபோல தக்காளி 20 ரூபாயிலிருந்து 30 ரூபாய்க்கு உயர்ந்துள்ளது. கேரட், அவரைக்காய், வெண்டைக்காய் எல்லாம் 40 ரூபாய். எல்லாவற்றையும்விட மோசம் பீன்ஸ்தான். கிலோ 80 ரூபாய் சொல்கிறார்கள்.
இன்னும் விலை உயரும்
ஒருபக்கம் லாரி தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட, மற்றொருபுறம் அதிக விலைக்கு விற்று வியாபாரிகள் கல்லா கட்டுகிறார்கள். இதில் ஒரு சம்பந்தமும் இல்லாமல் பொதுமக்கள்தான் மாட்டிக் கொண்டு முழிக்கிறார்கள். எப்போது பேச்சுவார்த்தை நடத்தி வேலைநிறுத்தம் முடிவுக்கு வருமோ தெரியாது. நாளையும் ஸ்டிரைக் தொடருமானால், இந்தவிலை உயர்வு நாளை இன்னும் அதிகமாகிவிடக்கூடும். அதனால் பொதுமக்கள் கூடுமானவரை இன்றே காய்கறிகளை வாங்கி வைத்துக் கொள்வது நல்லது.
விலை கண்ணை கட்டுதே
காய்கறி விலை உயர்வால் இல்லத்தரசிகள் பாடுதான் பெரும் பாடாக உள்ளது. கணவர், பிள்ளை, குடும்பத்தினருக்கு விதம் விதமாக சமைத்து போடலாம் என்றால் இந்த விலை வந்து கண்ணைக் கட்டுகிறது.. "ஏங்க, என்னாங்க.. என்னால சமைக்க முடியாது" என்று புலம்பும் நிலைக்கு கொண்டு போய் விட்டது இந்த லாரி ஸ்டிரைக்.