”ஏப்ரல் 1 முதல் கேரளாவுக்கு லாரிகள் ஓடாது” – கோரிக்கைகளை முன்வைத்து லாரி உரிமையாளர்கள் சங்கம் முடிவு
சென்னை: பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஏப்ரல் 1 முதல் கேரளாவுக்கு லாரிகளை இயக்கப்போவதில்லை என்று தமிழக-கேரளா லாரி உரிமையாளர் முடிவு செய்துள்ளனர்.
தமிழக-கேரள எல்லையிலுள்ள வாளையாறு வணிகவரித்துறை சோதனைச் சாவடியில் போதிய அளவு ஆட்கள் இல்லாததாலும், நவீன கருவிகள் இல்லாததாலும், அந்த வழியாக கேரளாவுக்கு செல்லும் சரக்கு வாகனங்கள் பலமணி நேரம் நின்று செல்லவேண்டிய நிலை ஏற்படுகிறது.
கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக இதுபோல பலமணி நேரம் நின்று தான் சோதனைச் சாவடியை கடந்து செல்கின்றனர். இதை தவிர்க்கும் வகையில், நவீன முறையில் சோதனை சாவடிகளை அமைக்கவேண்டும் என அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் அமைப்பின் சார்பாக கேரளா அரசுக்கு பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டது.
கடந்த ஆண்டு லாரி உரிமையாளர்களுடன், முன்பு பேச்சு நடத்திய கேரள அரசு, பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தது. அதில், வாளையார் சோதனைச்சாவடியில் விரைவில் மேலும் ஒரு வரிசை பூத் ஏற்படுத்தப்படும்.
ஒருங்கிணைந்த சோதனைச்சாவடிகளில் ஸ்கேனிங் இயந்திரம் அமைக்கப்படும், லாரிகளை நிறுத்தவும், ஓட்டுனர்களுக்கு தங்குமிடம் கழிப்பறை, குளியலறை வசதிகள் ஏற்ப்படுத்த 30 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும், சரக்கு கிடங்கும் ஏற்படுத்தப்படும். தேவையற்ற காலதாமதம் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தது.
ஆனால், இந்த வாக்குறுதிகள் எதுவும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. எனவே, அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ், தென் மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் கோவை-கேரளா லாரி உரிமையாளர் சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு சங்க நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
அதில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல், திட்டமிட்டபடி கேரள மாநிலத்துக்கு லாரிகளை இயக்குவதில்லை என முடிவு செய்துள்ளோம். திட்டமிட்டபடி போராட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.