10 நாட்களாக நடைபெற்ற லாரி ஸ்டிரைக் வாபஸ்… ஹைதராபாத் பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 10 நாட்களாக நடைபெற்று வந்த லாரி ஸ்டிரைக் இன்று வாபஸ் பெறப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் நடைபெற்று பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டதையடுத்து லாரிகள் இனி ஓடும் என அ
சென்னை: வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் தொகை உயர்வு, பெட்ரோல், டீசலுக்கான வாட் வரி உயர்வு போன்ற லாரி உரிமையாளர்களை பாதிக்கும் வகையில், மத்திய, மாநில அரசுகள் அறிவித்த நடவடிக்கைகளை கண்டித்து தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சங்கம் கடந்த மாதம் 30-ந் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறது.
இதனால் வடமாநிலங்களில் இருந்து உணவு பொருட்கள் உள்ளிட்டவை தமிழகத்துக்கு வருவது தடைபட்டது. அதேபோல் தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் பொருட்களும் தேங்கி கிடக்கின்றன.
இந்நிலையில், ஹைதராபாத்தில் லாரிகளின் காப்பீட்டு கட்டணம் தொடர்பாக மத்திய அரசுடன், லாரி உரிமையாளர்கள் சங்கம் தொடர்ந்து 3ம் கட்டப் பேச்சுவார்த்தையை இன்று நடத்தியது. அதில் சுமூக முடிவு எட்டப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை சுமூக முடிவு எட்டப்பட்டதாகவும், இன்சூரன்ஸ் 23 சதவீதம் வரை குறைந்துள்ளது என்றும் இதனால் சுமார் 10 ஆயிரம் கோடிக்கு மேல் லாபம் கிடைக்கும் என்று லாரி உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். எனவே, இந்தப் போராட்டம் இன்றுடன் முடிவிற்கு வந்துள்ளது என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
தொடர்ந்து 10 நாட்களாக ஓடாமல் கிடந்த லாரிகள், வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் என்று சொன்ன அடுத்த கணத்தில் இருந்து இயங்கும் என்று லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். போராட்டம் வாபஸ் பெறப்பட்டதையடுத்து காய்கறி, பழங்கள் விலை இனி குறையும் என்று எதிர்ப்பார்க்கலாம்.