சிரிய தாக்குதலுக்கு எதிரான போராட்டம்: பிஞ்சுக் குழந்தைகளுடன் பெருந்திரளாக பங்கேற்ற முஸ்லிம் பெண்கள்
Recommended Video
சென்னை : சிரியாவில் நடைபெற்று வரும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டி சென்னை மற்றும் சேலத்தில் போராட்டம் நடத்தின. இதில் ஆயிரக்கணக்கான குழந்தைகளும் பெண்களும் கலந்து கொண்டனர்.
சிரியாவில் தீவிரவாதிகள், கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள இடங்களை கைப்பற்றும் விதமாக அந்த நாட்டு அரசு உள்நாட்டு போர் நடத்தி வருகிறது. சிரியாவிற்கு ரஷ்யா போர் உதவிகளை செய்து வருகிறது.
கடந்த 1 வாரமாக தீவிரமாக நடைபெற்று வரும் போரினால் சுமார் 700 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அடாவடித்தனத்தை அரங்கேற்றி வரும் சிரியா அரசு நடத்திய தாக்குதலில் 150க்கும் மேற்பட்ட குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன.
இந்நிலையில், சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போரை தடுக்கக் கோரி ஐ.நா. பெருமன்றத்தை வலியுறுத்தும், அங்கு நடக்கும் தாக்குதல்களுக்கு ஆயுதம் அளித்து வரும் ரஷ்யாவைக் கண்டித்தும் பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் இன்று சென்னையில் ரஷ்ய தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அதுபோல சென்னையில் சேப்பாக்கம், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட இடங்களிலும், சேலத்திலும் நடந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம் பெண்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.
இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், புகைப்படத்திலும், வீடியோவிலும் குழந்தைகள் அடிபட்டுக் கதறும் காட்சிகள் மிகவும் மனதை வருத்துவதாகவும், தேவையில்லாமல் தனது சொந்த நாட்டு மக்களையே ஆயுதம் கொண்டு அழித்து வரும் சிரிய அதிபரை எதிர்த்தும் இந்த போராட்டம் நடைபெறுவதாகத் தெரிவித்தனர்.
மேலும், ஐ.நா.,வின் அமைதிப் படை உடனடியாக தலையிட்டு சிரியாவில் பிரச்னையை தீர்க்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.