ஓபிஎஸ் டீம் உண்ணாவிரதம்.. முதல்வர் வருகை... பலத்த பாதுகாப்பில் மதுரை
ஓபிஎஸ் அணியினரின் உண்ணாநிலை மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வருகையால் மதுரை மாநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை: ஜெ. மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஓபிஎஸ் அணியினர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். அதே நேரத்தில் நலத்திட்டங்களை தொடங்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் மதுரை வரவுள்ளார். இதனால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஜெ மரணத்தில் நீடிக்கும் மர்மங்கள் தொடர்பாக நீதி விசாரணை நடத்த வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஓபிஎஸ் அணியினர் இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். மதுரை பழங்காநத்தத்தில் நடராஜ் தியேட்டர் அருகே நடக்கும் உண்ணாவிரதப் போராட்டம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது.
இதில் கோபாலகிருஷ்ணன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சரவணன், மாணிக்கம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முத்துராமலிங்கம், அமர் நாத், சுந்தர்ராஜன், முன்னாள் மண்டலத்தலைவர் சாலைமுத்து, முன்னாள் பகுதி செயலாளர் செல்லத்துரை உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.
ஏராளமான தொண்டர்களையும், உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்க செய்யும் வகையில் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அதேநேரத்தில் மதுரையில் உலகத் தமிழ்ச்சங்கம் பெருந்திட்ட வளாகத்தில் நடக்கும் 1400-கோடி ரூபாய் மதிப்பில் 6-மாவட்டங்களுக்கு நலத்திட்டங்களை அறிவிக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மதுரை வரவுள்ளார்.
இதனால் மதுரை மாநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஏராளமான போலீசார் முதல்வர் செல்லும் பாதை மற்றும் பழங்காநத்தம் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர்.