எடப்பாடியாருக்கு எதிராக ஜல்லிக்கட்டுப் புரட்சிப்போல் மக்கள் போராட்டம்? மெரினாவில் போலீஸ் குவிப்பு
சென்னை மெரினா கடற்கரையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
சென்னை: சசிகலா தரப்பைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்றதைக் கண்டித்து மெரினாவில் மாணவர்கள் போராட்டம் நடத்த உள்ளதாக தகவல் பரவியது. இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக அரசியலில் முதல்வர் நாற்காலி யாருக்கு என கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த மோதல் நேற்று தற்காலிக முடிவை எட்டியுள்ளது. சசிகலா தரப்பைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி நேற்று முதல்வராக பதவியேற்றார்.
அவர் தலைமையிலான அமைச்சரவை நாளை சட்டசபையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபிக்க தவறினால் சசிகலா தலைமையிலாள ஆளும் அதிமுகவின் ஆட்சிக் கவிழும் வாய்ப்புள்ளது.
எடப்பாடிக்கு எதிர்ப்பு
சசிகலா தரப்பின் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக ஏற்க தமிழகம் முழுவதும் எதிர்ப்பு கிளத்பியுள்ளது. இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டுப் புரட்சியைப் போல் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தவுள்ளதாக தகவல் பரவியது.
மெரினாவில் போலீஸ் குவிப்பு
இதையடுத்து மெரீனா கடற்கரையில் பெருமளவில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர். மக்கள் போராட்டம் நடக்கப் போவதாக பரவிய செய்தி எதிரொலியால் போலீசார் குவிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
சமூக வலைதளங்கள் மூலம் தகவல்
கடற்கரை முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் போராட்டம் என சமூக வலைதளங்கள் மூலம் தகவல்கள் பரவியதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் இறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டுப்புரட்சி வெற்றி
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் 10 நாட்களுக்கும மேலாக சென்னை மெரினா உட்பட தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. இந்த போராட்டம் மாபெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.