தலைவர் பதவியில் இருந்தபோது.. தமிழகத்தில் தாமரையை மலர வைக்க முடியலையே.. அமித் ஷாவுக்கு ஏமாற்றம்தான்!
Recommended Video
சென்னை: தமிழகத்தில் பாரதிய ஜனதாவை மலர வைக்க முடியாமலேயே அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷாவின் பதவி காலம் நிறைவடைந்துள்ளது.
2014-ம் ஆண்டு பாஜகவின் தேசிய தலைவராக அமித்ஷா பொறுப்பேற்றது அக்கட்சியினருக்கு புதிய உத்வேகத்தை அளித்தது. மத்தியில் ஆட்சி அதிகாரம் இருந்தது.
அதனால் அரசியலில் வெற்றி என்பதை மட்டுமே இலக்காக கொண்டு அத்தனை வியூகங்களையும் வகுத்து செயல்படுத்தினார் அமித்ஷா. பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களிலும் புதிய புதிய காய்நகர்த்தல்கள் மூலம் அதிகாரத்தை அவர் பெற்றுக் கொடுத்தார்.
நட்டாதான் பாஸ்.. ஆனால் அமித் ஷாதான் பிக்பாஸ்.. தமிழ்நாடு, மே.வங்க தேர்தலுக்கு பாஜகவின் வியூகம்!
விமர்சன நிலைப்பாடுகள்
அவரது வியூகங்கள் விமர்சிக்கப்பட்டாலும் கூட, அரசியலில் வெல்லத்தானே வந்திருக்கிறோம் என்பதுதான் பாஜகவின் நியாயமான நிலைப்பாடாகவும் இருந்தது. வடகிழக்கு மாநிலங்களில் பாஜக கொடியை ஒவ்வொரு மாநிலமாக பறக்கவிட்டார் அமித்ஷா.
பாஜகவின் முழக்கம்
ஆனால் தென்னகத்தில் குறிப்பாக தமிழகத்தில் பாஜகவை எப்படியும் மலரச் செய்ய வேண்டும் என்கிற அவரது முனைப்பு அவரது பதவிக் காலத்தில் நிறைவேறாமலேயே போனது. கழகங்கள் இல்லாத தமிழகம் என்கிற முழக்கத்தை பெருநகரங்களின் சுவர்களில் பாஜக எழுதி அழகு பார்த்தது.
கைவிடப்பட்ட முழக்கம்
காலத்தின் கோலம்.. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவை தாங்குகிற சக்தியாக பாஜக நிலைப்பாடு எடுத்தது. இதனால் கழகங்கள் இல்லாத தமிழகம் என்கிற முழக்கமும் காலாவதியாகிப் போனது. பிற மாநிலங்களைப் போல பாஜகவுக்கு இங்கே சாதகமான அரசியல் களம் இல்லாமல் போனதும் அமித்ஷாவின் முயற்சிகள் கானல் நீராக காரணமாகின.
வலிமையான எதிர்க்கட்சிகள்
தமிழகத்தில் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் ஒருபோதும் பாஜகவுடன் கூட்டணி அமைக்காது; திமுகவைப் பொறுத்தவரை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் வாக்கு அரசியலுக்காவது பாஜகவை எதிர்த்தாக வேண்டிய கட்டாயம். ஆகையால் இயல்பாகவே திமுக, இடதுசாரிகள், காங்கிரஸ் கூட்டணி வலிமையானதாகவே தமிழகத்தில் உருவெடுத்து நிற்கிறது.
பாஜகவுக்கு கிடைக்காத நிழல்
இதனால்தான் அதிமுக அணியில் தயக்கமே இல்லாமல் பாஜக இணைந்தது. ஆனால் பாஜகவை அதிமுக உள்ளூர விரும்பவில்லை; அதனால் ஒவ்வொரு தேர்தலிலும் அக்கட்சியை எட்ட வைத்துக் கொண்டுதான் களப்பணிகளை அதிமுக செய்தது. இதனால் பாஜக ஒதுங்க கிடைத்த அதிமுக எனும் நிழல் முழுமையாக அக்கட்சிக்கு கிடைக்கவில்லை. அதனால் தாமரையும் மலர முடியாமலேயே போய்விட்டது.
இலக்கை தொடாத அஸ்திரங்கள்
இந்திய அரசியலில் சாணக்கியராக அமித்ஷா புகழப்பட்டாலும் தமிழகத்தில் அவரது வியூகங்கள் வெற்றியைத் தரவில்லை.. இந்திய அளவில் போற்றுதலுக்குரிய அரசியல் வல்லுநராக இருந்தாலும் தமிழகத்தில் அமித்ஷா எய்த அஸ்திரங்கள் எதுவுமே இலக்கை எட்டாமலேயே போய்விட்டன என்பதுதான் நிதர்சனம்.