காதலை ஏற்க மறுத்த இளம்பெண்: கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்!
காதல் தோல்வியால் சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து இளைஞர் ஒருவர் கீழே குதித்துள்ளார்.
சென்னை: காதல் தோல்வியால் கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்த இளைஞர் காயங்களுடன் உயிர் தப்பினார்.
சென்னை பரங்கிமலை தண்டுமா நகரைச் சேர்ந்த ரவி என்ற 18 வயது இளைஞர் தனது பாட்டி பார்வதியுடன் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்தப் பெண் அவரது காதலை ஏற்க மறுத்து விட்டார்.
இதனால் மனமுடைந்த ரவி கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து சுமார் 30 அடி ஆழத்தில் கீழே குதித்துள்ளார். இதனைக் கண்ட சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் ரவியை காயங்களுடன் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மணல் மேட்டின் மீது குதித்ததால் ரவி காயங்களுடன் தப்பியதாக கூறிய காவல்துறையினர் அவரது இடது கை மணிக்கட்டு உடைந்துள்ளதாக தெரிவித்தனர். காதல் தோல்வியால் இளைஞர் ஒருவர் போக்குவரத்து நெரிசல் மிக்க கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து குதித்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.