காதலும், காதலை சுவாசிக்கும் காதல் நெஞ்சங்களும் தலைவணங்கும் தீர்ப்பு!
Recommended Video
சென்னை: காதல்... இந்த காதல் எந்த தருணத்தில் எவர் மனதில் எப்படி நுழைகின்றது என்பது அறியா புதிராக தான் இருக்கிறது. அந்த புதிரில் பூக்கும் பூக்கள் சுகமானது.
அந்த காதல் சில நேரம் ஒரு தலை காதலாய் மாறும் போது அவஸ்தையில் கொண்டு தள்ளினாலும் கூட காதல் சுகமே. காதல் கை கூடினாலும் கை கூடாவிட்டாலும் காதலித்த நினைவுகள் சுகமே எப்போதும் காதலித்தவர்களுக்கு. ஆனால் இப்படி ரணமும் சுகமும் கூடிய ஒரு தலை காதலாக இல்லாமல் அந்த அழகான காதலின் வசம் இரு நெஞ்சங்கள் சேரும் போது அந்த சுகமே அலாதி தான். ஒரு உயிர் என இரு மூச்சுக் காற்றும் இணைந்திடும் தருணங்கள் சுகம்.
அனால் அப்படி உயிருக்கு உயிராக உணர்வில் கலந்து காதலிக்கும் நெஞ்சங்கள் கடைசியில் ஒரு உயிர் ஆகாமல் இருக்க காரணமாக இருப்பது அவர்களுக்கு உயிர் கொடுத்த பெற்றோர்களே. அதற்கு காரணம் காலம் காலமாக நாம் நம்மோடு சிலுவையாய் சுமந்து வரும் சாதியும் மதமும். கீழ் சாதி மேல் சாதி இந்த மதம் அந்த மதம் என்று சொல்லியே பல இதயங்களின் கனவு சிறகுகளை உடைத்து விடுகின்றனர். அவர்களும் பெற்றோர்களின் அன்புக்கோ மிரட்டலுக்கோ பயந்து வேறு வாழ்க்கைக்குள் வலுக்கட்டாயமாக தள்ளப்படுகின்றனர் .
ஆணவக் கொலைகள்
இப்படிப்பட்ட பெரியோரின் மிரட்டலையும் வேஷமான பாசத்தையும் தாண்டி நேசித்தவனை கரம் பிடிக்கும் பட்சத்தில்தான் அரங்கேறுகிறது ஆணவக் கொலைகள். ஊட்டி வளர்த்த மகள் கவுசல்யா சங்கர் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டாள் என்பதற்காக எப்படி இந்த பெற்றோர்களால் வெட்டி கொல்ல முடியும். தன் சாதி மக்கள் முன் தலை கவிழ கூடாது என்பதற்காக தன மகளின் மாங்கல்யத்தை பறிக்கும் அளவுக்கு கொடூர எண்ணத்தை அவர்களுக்குள் விதைக்கிறது இந்த சாதி வெறி. அன்பு மறந்த, தாய்மை மறந்த சாதீய மிருகங்களாக மாறி தான் இத்தகைய ஆணவ கொலைகளை செய்கிறார்கள்...
நம்ம சாதிக்கார பயலா
இத்தகைய சாதி வெறி கொண்ட பெற்றோர்கள் என்ன செய்திருக்க வேண்டும். குழந்தைக்கு பொம்மையும், காலையில் எழுப்பி காபியும், பிடித்த வண்ணத்தில் சுடிதாரும் வாங்கி குடுக்கும் போது காட்டிய அதே அன்போடு ஏன் கண்ணு உனக்கு அவனை பிடிச்சிருக்கு என்று அம்மா கேட்டு அவளை புரிந்து கொள்ள முயற்சி செய்திருக்கலாம். படிப்பு முடிச்சப்புறம் எல்லாம் பாத்துக்கலாம் என்று அரவணைப்போடு சொல்லி இருக்கலாம். ஆனால் மனசுக்கு பிடிச்சவன் நல்லவனா கெட்டவனானு பார்க்க வேண்டிய பெற்றோர்கள் நம்ம சாதிக்கார பயலா என்று தான் முதலில் பார்க்கிறார்கள்.
வாழ வழி விட்டிருக்கலாம்
கவுசல்யா கூட இதை தான் கூறுகிறார். சங்கர் எப்படினு ஒருவாட்டி கூட என்கிட்டே கேக்கவே இல்ல. இது நாள் வரை கேட்டதில்லை. அவங்க சொன்னதெல்லாம் அவனை விட்டு விடு. இது தான் நம்ம பிள்ளைங்க காதலிக்கிறாங்க னு தெரிந்ததும் பெரும்பாலான பெற்றோர்கள் காட்டுகிற முகம். இந்த பாழாய்ப்போன சாதி மதம் என்று அதை மட்டும் விடாமல் பிடித்து கொண்டிருக்கும் குரங்குகளாக தொங்கி கொண்டிருக்காமல் இளைய சமுதாயத்தின் இதயங்களை வாழ விட்டு இருக்கலாம்.
தொடரும் துயரக் கதைகள்
இது ஒரு கவுசல்யாவின் கதை அல்ல. நம்ம ஊர்புறங்களில் எத்தனையோ வீடுகளில் அவனை விட்டு விடு என்ற தந்தையின் அரட்டல் சத்தத்திலும் அம்மாவின் அழுகையிலும் பல பெண்களின் காதல் கண்ணீரோடு கரைந்து போய் கொண்டுதான் இருக்கின்றது. இவர்களின் அரட்டலுக்கும் உருட்டலுக்கும் அடிபணியாமல் காதலனோடு கைகோர்த்து துணிந்து எழும் இள நெஞ்சங்கள் சில ஜோடியாகவும் சில தனியாகவும் ரத்த வெள்ளத்தில் கரை சேர்வது இன்னும் நடந்து கொண்டு தானே இருக்கிறது.
காதலர்கள் வணங்குவார்கள்
சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடிய பாரதியின் பிறந்த நாளுக்கு அடுத்த நாள் இவ்வழக்குக்கு தீர்ப்பு வந்தது மிகப் பொருத்தமாகவே உள்ளது. மகளின் காதல் கணவன் சங்கரை கொன்ற பெற்றோருக்கும் சுற்றத்தாருக்கும் பாரதியின் கோபக்கண்களோடு நீதிபதி தூக்கு தண்டனை என்ற மிகச் சரியான தண்டனையை கொடுத்திருக்கிறார். பாரதியின் சாதிகள் இல்லையென்ற கனவு நனவாகவிட்டாலும் கூட தமிழகத்தில் தொடர்ந்து வரும் கவுரவ கொலைகளை இனி இல்லையென செய்யும் என்ற நம்பிக்கையை துளிர்விட செய்திருக்கிறது இம்மாபெரும் தீர்ப்பு. அந்த கவுசல்யா மட்டுமல்ல இந்த பிரபஞ்சம் முழுக்க வியாபித்திருக்கும் காதலும் காதலை சுவாசிக்கும் காதல் நெஞ்சங்களும் தலைவணங்கும் அந்த நீதிபதியையும் இந்த காதல் அசுரர்களுக்கு எதிரான தீர்ப்பையும்.!
- Inkpena சஹாயா