சமூகத்தில் அன்பும், அமைதியும் தழைக்க வேண்டும் : தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ரமலான் வாழ்த்து
சமூகத்தில் அன்பும், அமைதியும் தழைக்க வேண்டும் என்று தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ரமலான் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : நாடெங்கும் ஈகைத் திருநாளை கொண்டாடும் இஸ்லாமிய சகோதர,சகோதரிகளுக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் துணைப் பொதுச்செயலாளர் முஹம்மது ஷிப்லி தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய சமுதாயத்தின் முக்கியத் திருவிழாவான ரமலானை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் துணைப் பொதுச்செயலாளர் முஹம்மது ஷிப்லி வாழ்த்துச்செய்தி வெளியிட்டுள்ளார்.
அதில், மனிதர்கள் அனைவரும் ஒருதாய் வயிற்று மக்கள் என்று பிரகடனப்படுத்துகிறது இஸ்லாம். மனிதர்களில் ஏற்றத் தாழ்வுகள் இல்லாத சமத்துவ சமுதாயத்தை அடையாளப்படுத்துகிறது இஸ்லாம்.
அமைதி,மனிதர்களுக்கு சேவை செய்தல், குழந்தைகளிடம் அன்பு செலுத்துதல், பெண்களின் உரிமைகளைப் பேணுதல், குடும்ப உறவுகளை அரவணைத்தல்,பிற சமயத்தவர்களின் உணர்வுகளை மதித்தல், அவர்களோடு அன்புடனும்,மனிதநேயத்துடனும் நடந்து கொள்ளுதல் போன்ற நல்லுபதேசங்களை சொல்கிறது இஸ்லாம்.
பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில், இஸ்லாம் வலியுறுத்துகின்ற தன்மைகளை முஸ்லிம் சமுதாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும்,மதவெறி,வன்முறை, சமூகக் கொடுமைகள் போன்ற மனிதநேயத்திற்கு எதிரான செயல்கள் நீங்கி,அமைதியும்,அன்பும், சமூக நல்லிணக்கமும் தழைக்கவும்,பிறருக்கு ஈந்து உதவும் பண்பு வளர அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம் என்றும் மகிழ்ச்சி பொங்கும் இந்த ஈகைத் திருநாளில் உறுதி ஏற்போம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.