உயிருக்கு பாதுகாப்பு இல்லை... நெல்லை போலீசில் கேரளா ஜோடி தஞ்சம்
நெல்லை: கேரளாவை சேர்ந்த காதல் ஜோடி உயிருக்கு பாதுகாப்பு கேட்டு நெல்லை எஸ்பி அலுவலகத்திற்கு வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகேயுள்ள தெய்வசெயல்பேரி அம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் திருவனந்தபுரம் ரயில்வே ஸ்டேஷனில் உள்ள கேன்டீனில் டீ விற்கும் வேலை பார்த்து வந்தார். திருவனந்தபுரம் கமலேஸ்வரபுரம் ஆரியங்குழி சாலையை சேர்ந்தவர் ரேஷ்மா. இவர் அங்குள்ள கால்நடை மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரிக்கு ரயிலில் செல்லும் போது ஏற்பட்ட பழக்கம் இருவருக்கும் காதலாக மாறியது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் பெண்ணின் வீட்டாருக்கு காதல் விவகாரம் தெரிய வரவே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் அச்சம் அடைந்த காதல் ஜோடி திருவனந்தபுரத்தில் இருந்து தப்பி நெல்லை வந்தனர். மதுரை அருகே உள்ள வெங்கடசேபுரம் பதிவாளர் அலுவலகத்தில் காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டனர்.
பெண்ணின் பெற்றோர் திருவனந்தபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் அந்த மாநில போலீசார் மூலக்கரை வந்து காவல் நிலையத்தில் விசாரணை நடத்தினர். இதனால் அச்சம் அடைந்த ஜோடி மாலையில் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தது. தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதால் பாதுகாப்பு வழங்கும் படி அதிகாரிகளிடம் கேட்டு கொண்டனர். எஸ்பி அலுவலக அதிகாரிகள் அவர்களிடம் மனுவை பெற்று கொண்டு அனுப்பி வைத்தனர். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.