திருமணம் செய்து வைக்க மறுத்த உறவுகள்.. பிரிய மனமில்லாமல் ஒன்றாக தூக்கில் தொங்கிய காதல் ஜோடி!
சேலம் அருகே பெற்றோர் திருமணம் செய்து வைக்க மறுத்ததால் காதல் ஜோடி ஒன்றாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
சேலம்: பெற்றோர் திருமணம் செய்து வைக்க மறுத்ததால் காதல் ஜோடி ஒன்றாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம்,பென்னாகரம் ஏரியூர் அருகேயுள்ள வத்தலப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கொளந்தை. இவருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.
இதில் மூத்த மகன் சிவாவுக்கு திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வருகிறார். இளைய மகன் தங்கவேலு, நாமக்கல் மாவட்டம் வெப்படை பகுதியில் தங்கி ஜெ.சி.பி ஓட்டுனராக வேலை செய்து வருகிறார்.
மலர்ந்த காதல்
வெப்படை பகுதியை சேர்ந்த மைனாவதி என்ற பெண் அதே பகுதியில் உள்ள நூல்மில்லில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது தங்கவேலுவுக்கும் மைனாவதிக்கும் இடையே காதல் மலர்ந்து அடிக்கடி சந்தித்து வந்தனர்.
திருமணம் செய்ய முடிவு
தொடர்ந்து கடந்த 4 மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். தங்கவேலுவும் அவருடைய காதலி மைனாவதியும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். இதுதொடர்பாக பெற்றோரிடம் திருமணம் செய்துவைக்குமாறு இருவரும் கேட்டனர்.
அக்காவிடம் கேட்ட தம்பி
அப்பொழுது பெண் வேறு சமுதாயம் என்பதால் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்க மறுத்துவிட்டனர். இதையடுத்து தங்கவேலு தனது காதலியுடன் அக்கா ஜெயாவின் வீடான ஊமகவுண்டம்பட்டிக்கு சென்று திருமணம் செய்துவைக்குமாறு கேட்டுள்ளனர்.
மறுத்த அக்கா
அக்காவும் தந்தையின் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்து வைக்க முடியாது என்று கூறியுள்ளார். மேலும் இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. அந்த பெண்ணை அவரது வீட்டிலேயே கொண்டு சென்று விட்டு விடுமாறும் கூறியதாக தெரிகிறது.
மறுத்த மைனாவதி
அப்போது மைனாவதி நான் வீட்டிற்கு போனால் என்னை கொன்று விடுவார்கள், ஆகவே நான் அங்கே போக மாட்டேன் என்று மறுத்துள்ளார். இந்தநிலையில் காதல் ஜோடி குறித்து உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து அவர்கள் வந்தவுடன் முடிவு செய்து கொள்ளலாம் என கூறியுள்ளனர்.
தேடிய சொந்தங்கள்
இதை தொடர்ந்து காதல் ஜோடி இருவரும் இன்று காலை அதே பகுதியில் உள்ள கரட்டு பகுதிக்கு காலை கடன் முடித்துவிட்டு வருவதாக சென்றுள்ளனர். அவர்கள் சென்று வெகுநேரமாகியும் வீடு திரும்பாத நிலையில்,அக்கா வீட்டினர் அக்கம்பக்கத்தில் தேடி வந்துள்ளனர்.
தூக்கில் தொங்கிய காதலர்கள்
இதனிடையே கரட்டு பகுதியில் அக்கா தனியாக ஒரு புதுவீடு கட்டி வருகிறார். அந்த வீட்டிற்கு சென்று பார்த்தபொழுது காதல் ஜோடி வீட்டின் கூரையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துக்கொண்டது தெரியவந்தது.
போலீசாருக்கு தகவல்
இதை பார்த்த அதிர்ச்சியடைந்த அவர் சத்தம் போட்டு கூச்சலிட்டார். இதனைக் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் சேலையில் தனித்தனியாக தூக்கில் தொங்கிய இருவரையும் இறக்கினர். உடனே தீவட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தற்கொலை குறித்து உறவினர்களிடம் விசாரணை நடத்தினர்.
பெரும் சோகம்
தொடர்ந்து இருவரின் உடலையும் மீட்டு பிரேதபரிசோதனைக்காக தங்கவேலுவின் உடலை சேலம் அரசு மருத்துவமனைக்கும், மைனாவதி உடலை ஓமலூர் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். திருமணம் செய்து வைக்க உறவினர்கள் மறுத்ததால் காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.