போலீசில் தஞ்சமடைந்த காதல் ஜோடி- பெற்றோர் எதிர்ப்பினை மீறி திருமணம்
தார்வார்: காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். அவர்களுக்கு போலீசார் திருமணம் நடத்தி வைத்தனர்.
தார்வார் மாவட்டம் கல்கட்டகி தாலுகா சங்கரதேவர கொப்பா கிராமத்தை சேர்ந்தவர் பரசுராம். அதேப் போல் கல்கட்டகி தாலுகா மலகன கொப்பா கிராமத்தை சேர்ந்தவர் உலகம்மா. பரசுராமும், உலகம்மாவும் கடந்த 2 ஆண்டுகளாக உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர்.
இந்த காதலுக்கு இருவரது பெற்றோரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் உலகம்மாவின் பெற்றோர், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவருக்கு திருமணம் செய்துவைக்க கல்கட்டகி அருகே பெடகேரி கிராமத்தை சேர்ந்த ஒரு வாலிபரை பேசி முடித்துவைத்திருந்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த உலகம்மா, தனது காதலன் பரசுராமிடம் இது பற்றி தெரிவித்தார். இதையடுத்து 2 பேரும் தங்களது வீடுகளில் இருந்து வெளியேற முடிவு செய்தனர். அதன் படி நேற்று முன்தினம் பரசுராமும், உலகம்மாவும் தங்களது வீடுகளில் இருந்து வெளியேறினர். பின்னர் கல்கட்டகி டவுன் போலீஸ் நிலையத்தில் இருவரும் தஞ்சம் அடைந்தனர்.
பின்னர் அவர்கள், நாங்கள் 2 பேரும் காதலித்து வருகிறோம். எங்கள் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். எங்களுக்கு 18 வயதை கடந்துவிட்டோம். எனவே எங்களுக்கு நீங்களே திருமணம் செய்து வைக்க வேண்டும் போலீசாரிடம் வேண்டுகோள் வைத்தனர்.
அதைதொடர்ந்து போலீசார் பரசுராம், உலகம்மா ஆகியோரின் பெற்றோரை அழைத்து பேசி சமாதானப்படுத்தினர். இதையடுத்து பரசுராமுக்கும், உலகம்மாவுக்கும் போலீஸ் நிலையத்தில் வைத்தே போலீசார் திருமணம் நடத்திவைத்தனர். இதனால் காதல் ஜோடி தங்களுக்கு திருமணம் நடந்த சந்தோஷத்தில் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.