வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தம்: சென்னை உட்பட 7 துறைமுகங்களில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
சென்னை உள்ளிட்ட 7 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
சென்னை: வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ள நிலையில் சென்னை உள்ளிட்ட 7 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வடமேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை, எண்ணூர், கடலூர், நாகை, பாம்பன் துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
இதேபோல் புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களிலும் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. ஒன்றாம் எண் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டால் புயல் உருவாகக்கூடிய வானிலை சூழல் உருவாகியுள்ளது என அர்த்தம்.
பலத்த காற்று
இதனால் துறைமுகம் ஏதும் பாதிக்கப்படவில்லை. ஆனால், பலமாக காற்று வீசுகிறது என்பதை குறிக்கும்.
வங்கக்கடலில் காற்றழுத்தம்
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலையால் வடமேற்கு வங்கக்கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.
மழைக்கு வாய்ப்பு
இதனிடையே வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இரவில் மழை பெய்யலாம்
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.