வங்கக்கடலில் நீடிக்கும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. தமிழகத்தில் மழை பெய்யும்: வானிலை மையம்
மத்திய வங்ககடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: மத்திய வங்ககடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் உள்ளிட்ட காரணங்களால் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் நீரில்லாமல் வறண்டு கிடந்த நீர் நிலைகள் எல்லாம் நிரம்பி வழிகின்றன.
தமிழகத்திற்கு அதிக மழைப்பொழிவை தரும் வடகிழக்குப் பருவமழையும் இதுவரை தொடங்க வில்லை. இந்நிலையில் மத்திய வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலவுவதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது வடமேற்குப் பகுதியில் நகர்ந்து வருவதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒருசில இடங்களில் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.