இது "மொக்க" காற்றழுத்தம் பாஸ்.. வேலைக்கு ஆகாதாம்.. சொல்கிறார் வெதர்மேன்!
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத்தால் எதிர்பார்த்த அளவுக்கு மழை இருக்காது என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத்தால் எதிர்பார்த்த அளவுக்கு மழை இருக்காது என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். அது ஒரு மொக்க காற்றழுத்தம் என்றும் அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அண்மையில் வங்கக்கடலில் உருவான ஓகி புயல் கன்னியாகுமரி நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அளவுக்கு கனமழையை கொடுத்தது. அதேபோல் பலத்த காற்றால் கன்னியாகுமரி மாவட்டத்தையும் சூறையாடியது.
இதன் தாக்கத்தில் இருந்து கன்னியாகுமரி இன்னும் மீளாத நிலையில் வங்கக்கடலில் அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்தது. மேலும் இது புயலாக மாற வாய்ப்புள்ளதாக கூறிய வானிலை மையம் வட தமிழகம் மற்றும் தெற்க ஆந்திரா இடையே கரையை கடக்கலாம் என்றும் கூறியது.
மக்கள் எதிர்பார்ப்பு
இதன் காரணமாக சென்னை உட்பட வடதமிழகத்தில் மீண்டும் கன மழையும் பெய்யும் என்றும் கூறப்பட்டது. இதனால் மக்கள் பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.
மொக்க காற்றழுத்தம்
இந்நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த காற்றழுத்த தாழ்வுநிலை குறித்து பதிவிட்டுள்ளார். அதில் இந்த காற்றழுத்தம் ஒரு மொக்க காற்றழுத்தம் என அவர் தெரிவித்துள்ளார்.
புயலாக மாற வாய்ப்பு
அதில் வங்கக்கடலில் உருவாகியுள்ள இந்த குறைந்த காற்றழுத்தம் நாளைக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் அது புயலாக மாறும் வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
அச்சப்படத் தேவையில்லை
இதனால் வரும் நாட்களில் செயற்கைகோள் படத்தில் பெரும் மேகக்கூட்டத்தை காணலாம் என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் அதனால் அச்சப்படத் தேவையில்லை என்றும் தமிழ்நாடு வெதர் மேன் தெரிவித்துள்ளார்.
மொக்கையாக பலவீனமடையும்
ஆந்திர கடற்பகுதியை நெருங்கும் போது அசாதாரண காரணங்களால் இந்த காற்றழுத்தம் மொக்க காற்றழுத்தமாக பலவீனமடையும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தனது பதிவில் தெரிவித்துள்ளார். ஆந்திரா நோக்கி நகரும்போது அதிர்ஷ்டவசமாக நமக்கு ஒரு நாள் மழை கிடைக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
எலும்புக்கூடாகதான் இருக்கும்
மேலும் ஆந்திராவை நெருங்கும் போது இந்தப்புயல் வெறும் எலும்புக்கூடாகதான் இருக்கும் என்றும் கூறினார். இந்த புயலால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் மக்கள் அவர்களின் அன்றாட வேலைகளை தொடராலாம் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
ஐஎம்டி அறிவிப்புகள்
கடல் சீற்றத்துடன் காணப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். மேலும் இது தனது தனிப்பட்ட விளக்கம் என்றும் இதனால் எந்த குழப்பமும் ஏற்படாது என்றும் கூறியுள்ளார். மேலும் இந்திய வானிலை மையத்தின் அறிவிப்புகளை மக்கள் பின்பற்றி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.