பங்குனி வெயிலை பஞ்சர் செய்ய வருகிறது 'ரமணனின் கோடை மழை': தென் தமிழகத்தில் தொடருமாம்!!
திருநெல்வேலி: பங்குனி மாத வெயில் தமிழகம் முழுவதும் பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கும் அதே நேரத்தில் தென் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ஜில் ஜில் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.
சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த 15 தினங்களுக்கும் மேலாக கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இதனிடையே குமரி கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தென் தமிழகத்தில் ஒருசில இடங்களில் கடந்த 2 தினங்களாக பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மேலும் 2 நாட்கள் மழை நீடிக்கும் என்ற சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பு தென் மாவட்ட மக்களை குளிர்வித்துள்ளது.
திருநெல்வேலி, மதுரையில்
கோடை காலம் தொடங்கும் முன்பாகவே திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் வெப்பம் 100 டிகிரியை எட்டியிருந்தது. இந்த நிலையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தென்மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. மதுரை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவில் பரவலாக மழை பெய்தது. ஆண்டிபட்டி பகுதிகளிலும் பரவலாக கோடை மழை பெய்தது.
நெல்லை மாவட்டத்தில்
மேற்குத் தொடர்ச்சி மலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்துள்ளது.
சனிக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் களக்காட்டில் அதிகபட்சம் 123.2 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. ஆய்க்குடியில் 80.2, ஆலங்குளத்தில் 38.6, கன்னடியன் அணைக்கட்டில் 25, திருநெல்வேலி 9, பாளையங்கோட்டை 7, அம்பாசமுத்திரம் 14, சேரன்மகாதேவி 17, செங்கோட்டை 18.2, ராதாபுரம் 14 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
அணை பகுதிகளில் மழை
பாபநாசம் அணையில் 68 மி.மீ, சேர்வலாறு அணையில் 78 மி.மீ, மணிமுத்தாறு அணையில் 33.2மி.மீ, கடனாநதி அணையில் 10 மி.மீ, ராமநதி அணையில் 10 மி.மீ, கருப்பாநதி அணையில் 2 மி.மீ, குண்டாறு அணையில் 16 மி.மீ, அடவிநயினார் அணையில் 5 மி.மீ, நம்பியாறு அணையில் 5 மி.மீ, கொடுமுடியாறு அணையில் 60 மி.மீ மழை பெய்துள்ளது.
அணை நீர் நீர்வரம்
பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 590.93 கனஅடியும், மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 333 கனஅடியும், கடனாநதி அணைக்கு விநாடிக்கு 25 கனஅடியும், குண்டாறு அணைக்கு விநாடிக்கு 45 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.
பாபநாசம் அணை 78.75 அடி, சேர்வலாறு அணை 91.07, மணிமுத்தாறு அணை 89.80 அடி, கடனாநதி அணை 27.40 அடி, ராமநதி அணை 25 அடி, கருப்பாநதி அணை 24.67 அடி, அடவிநயினார் அணை 29.50 அடி, வடக்குப் பச்சையாறு அணை 40 அடி, கொடுமுடியாறு அணை 2.50 அடியாகவும் இருந்தது.
நீரின் அளவு குறைப்பு
நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததாலும், பாசனத்திற்கு தண்ணீர் தேவையில்லாததால் அணைகளில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல கடந்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் 8 செ.மீ. மழைபெய்துள்ளது.
குமரியில் காற்றழுத்தம்
குமரிக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கே நகர்ந்தது. தற்போது லட்சத்தீவு கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை கொண்டுள்ளது என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் கூறியுள்ளார். இதன் காரணமாக அடுத்த 48 மணி நேரத்துக்கு தென் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யக்கூடும். உள்மாவட்டங்களில் கனமழையை எதிர்பார்க்கலாம். வட தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்யக்கூடும். சென்னை பொறுத்தவரையில் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.