திருமா, நயினார் நாகேந்திரன்..... 1000க்கும் குறைவான வாக்குகளில் தோல்வியைத் தழுவியவர்கள்
சென்னை: சட்டசபை தேர்தலில் வெறும் 87 வாக்குகளில் தோல்வியை பறிகொடுத்திருக்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன். இதேபோல் 13 பேர் ஆயிரத்துக்கும் குறைவான வாக்குகளில் தோல்வியைத் தழுவியுள்ளனர்.
நெல்லை தொகுதியில் திமுகவின் ஏ.எல்.எஸ். லட்சுமணன், அதிமுகவின் நயினார் நாகேந்திரன் போட்டியிட்டனர். இதில் திமுகவின் லட்சுமணனிடம் 601 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துவிட்டார் நயினார் நாகேந்திரன்.
தென்காசியில் அதிமுகவின் செல்வமோகன்தாஸ் பாண்டியனும் காங்கிரஸின் பழனி நாடாரும் போட்டியிட்டனர். அதிமுக வேட்பாளரிடம் 462 வாக்குகளில் பழனிநாடார் தோற்றுப் போனார்.
திருவிடைமருதூர் திமுகவின் கோவி செழியனும் அதிமுகவின் சேட்டுவும் மோதினர். இதில் செழியனிடம் 532 வாக்குகளில் தோல்வி அடைந்தார் சேட்டு.
திருமயம் தொகுதியில் திமுகவின் ரகுபதியும் அதிமுகவும் வைரமுத்துவும் களம் கண்டனர். ரகுபதியிடம் வைரமுத்து 766 வாக்குகளில் தோல்வி அடைந்துள்ளார்.
திருப்போரூர் தொகுதியில் அதிமுகவின் கோதண்டபாணியிடம் 950 வாக்குகளில் தோற்றுப் போனார் திமுகவின் விஸ்வநாதன்.
சென்னை பெரம்பூர் தொகுதியில் அதிமுகவின் பி. வெற்றிவேலிடம் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர். தனபாலன் 519 வாக்குகளில் வெற்றி வாய்ப்பை பறிகொடுத்தார்.
பேராவூரணியில் அதிமுகவின் கோவிந்தராசுவிடம் திமுகவின் அசோக் குமார் 995 வாக்குகளில் தோல்வி அடைந்தார்.
பரமத்தி வேலூரில் திமுகவின் கே.எஸ். மூர்த்தியிடம் 378 வாக்குகளில் தோல்வி அடைந்தார் அதிமுகவின் ஆர். ராஜேந்திரன்.
கோவில்பட்டியில் அதிமுகவின் கடம்பூர் ராஜூவிடம் திமுகவின் ஏ சுப்பிரமணியன் 428 வாக்குகளில் தோற்றார்.
கரூரில் அதிமுகவின் விஜயபாஸ்கரிடம் திமுகவின் பேங்க் சுப்பிரமணியன் 441 வாக்குகளில் வீழ்ந்தார்.
காட்டுமன்னார்கோவிலில் வெறும் 87 வாக்குகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், அதிமுக வேட்பாளரிடம் தோற்றார்.
பர்கூர் தொகுதியில் அதிமுகவின் ராஜேந்திரனிடம் திமுகவின் கோவிந்தராசன் 982 வாக்குகளில் தோற்றுப் போனார்
செய்யூரில் திமுகவின் ஆர்.டி. அரசுவிடம் அதிமுகவின் முனுசாமி வெறும் 304 வாக்குகளில் தோல்வியைத் தழுவினார்.