முதல்வர் பதவி: கருணாநிதியை (21.33%) விட ஸ்டாலினுக்கு (27.98%) அதிக ஆதரவு!- லயோலா கருத்துக்கணிப்பு
சென்னை: சில வருடங்கள் முன்பு தினகரன் பத்திரிகை வெளியிட்ட கருத்துக் கணிப்பை போலவே திமுகவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது லயோலா கல்லூரி இன்று வெளியிட்டுள்ள ஒரு கருத்துக்கணிப்பு.
பொதுவாக லயோலா கல்லூரி வெளியிடும் கருத்துக்கணிப்புகள் உண்மையோடு இயைந்து இருப்பது பழைய வரலாறு. இன்றும் அதுபோன்ற ஒரு கருத்துக்கணிப்பை லயோலா வெளியிட்டுள்ளது.
ஜெயலலிதா டாப்
அதில், முதல்வர் பதவிக்கான வேட்பாளர்களில் மக்களின் ஆதரவு யாருக்கு உள்ளது என்ற கேள்விக்கு, 31.56 சதவீதத்தினர் ஜெயலலிதாவுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர். இது பெரும்பாலானோர் யூகிக்க கூடியதாகவே இருந்துவருகிறது. ஆச்சரியமில்லை. ஆனால், இரண்டாவது இடத்தில் கருணாநிதி இருப்பார் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே.
இரண்டாவது ஸ்டாலின்
27.98 சதவீத மக்கள் ஸ்டாலின் அடுத்த முதல்வராக வேண்டும் என்று ஆசை தெரிவித்துள்ளனர். அதாவது, ஜெயலலிதாவுக்கு அடுத்தபடியாக அதிக மக்கள் ஸ்டாலினை முதல்வராக்கி பார்க்க ஆசைப்படுகிறார்கள். ஆனால் திமுக தலைவர் கருணாநிதிக்கோ 21.33 சதவீதம்பேர்தான் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தந்தை-மகன் போட்டி
திமுக வரலாற்றில் முதல்முறையாக, கருணாநிதிக்கும், ஸ்டாலினுக்குமே ஒரு கருத்துக் கணிப்பில் நேரடி போட்டி உருவாகியுள்ளது இதுதான் முதல்முறை. அதிலும், ஸ்டாலின் விஞ்சியுள்ளது பல்வேறு சிலருக்கு ஆச்சரியம் தருகிறது.
கருணாநிதி வேண்டாம், திமுக வேண்டும்
கருணாநிதியின் கடந்த கால ஆட்சியில் ஈழத்தமிழர் பிரச்சினை, 2ஜி ஊழல் பிரச்சினை போன்றவற்றை கையாண்ட விதத்தினால் ஏற்பட்ட அதிருப்தியை மக்கள் இப்படி காட்டியுள்ளனர் என்று பொருள் கொள்ளலாம். அதாவது திமுக வேண்டும், ஆனால் கருணாநிதி வேண்டாம் என்பதன் வெளிப்படாகாவே இந்த கருத்துக்கணிப்பை பார்க்க வேண்டியுள்ளது.
என்னவாகும்?
அதிமுகவை அசைக்க கூடிய சக்தியாக திமுக மட்டுமே உள்ளதால், அதிமுக எதிர்ப்பாளர்களும் ஸ்டாலினுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்திருக்க கூடும். கருணாநிதியை முன்னிருத்தினால் அடுத்த தேர்தலில் திமுக செல்வாக்கு பெறுமா என்ற கேள்விக்குறியை இந்த கருத்துக் கணிப்பு உருவாக்கியுள்ளது.
ஸ்டாலின் பின்வாங்கல்
சமீபத்தில் ஸ்டாலின் ஒரு பொதுக்கூட்டத்தில், அடுத்ததாக திமுக ஆட்சிக்கு வந்தால் கருணாநிதிதான் முதல்வர் என்று பகிரங்கமாக அறிவித்துவிட்டார். இந்நிலையில் வெளியாகியுள்ள இக்கருத்துக்கணிப்பு திமுகவுக்கு சங்கடமாகவே பார்க்கப்படுகிறது. திமுகவுக்குள் கருணாநிதி மற்றும் ஸ்டாலினுக்கு தனித்தனி ஆதரவாளர்கள் இருப்பதாக கூறப்படுவதுண்டு. அவர்கள் நடுவே இந்த கருத்துக்கணிப்பு புகைச்சலை கிளப்பி விடும் வாய்ப்புள்ளது.
கருத்துக்கணிப்புக்கு 3 உயிர்
திமுகவின் மாறன் சகோதரர்களுக்கு சொந்தமான தினகரன் பத்திரிகையில், திமுகவில் அழகிரியைவிட ஸ்டாலினுக்கு அதிக செல்வாக்கு இருந்ததாக கருத்துக்கணிப்பு வெளியானது. இதையடுத்து மதுரையில் தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்டு அப்பாவி ஊழியர்கள் 3 பேர் உயிரிழந்தனர். இதுவரை அந்த படுகொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படவில்லை.
புகைச்சல்
தினகரனை போலவே தற்போது லயோலா கல்லூரி வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பும் திமுகவின் இரு அணிகள் இடையே புகைச்சலை ஏற்படுத்தியிருந்தாலும், விளைவுகள் மோசமாக இருக்காது என்று எதிர்பார்க்கலாம். ஏனெனில் ஸ்டாலினே அடுத்த முதல்வர் கருணாநிதி என்று அறிவித்துள்ளதால், கருணாநிதி ஆதரவாளர்கள் கோபம் கொள்ள பெரிய அளவில் வாய்ப்பிருக்காது. ஆனால் புகைச்சலுக்கு பஞ்சமிருக்காது.