எல்.பி.ஜி டேங்கர் லாரிகள் ஸ்டிரைக்: சமையல் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு அபாயம்
சென்னை: வாடகை உயர்வு கோரி, எல்பிஜி கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் நள்ளிரவு முதல் வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டம் நீடிக்கும் பட்சத்தில் தென்னிந்தியாவில் சமையல் எரியவாயு சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.
மத்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை எண்ணை நிறுவனங்களான ஐஓசி, பிபிசி, எச்பிசி ஆகிய 3 நிறுவனங்கள் நாடு முழுவதும் சமையல் எரிவாயு வினியோகம் மேற்கொள்கின்றன.
எண்ணை சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சிலிண்டர்களில் நிரப்பும் மையங்களுக்கு எரிவாயுவை எடுத்து செல்லும் பணியில் நாமக்கல்லை சேர்ந்த டேங்கர் லாரிகள் ஈடுபடுத்தப்படுகின்றன.
ஆயில் நிறுவனங்கள் 3 ஆண்டுக்கு ஒரு முறை டேங்கர் லாரி உரிமையாளர்களுடன் வாடகை ஒப்பந்தம் ஏற்படுத்தி கொண்டு லாரிகளுக்கு பணி வழங்குகிறது. ஒப்பந்தம் கடந்த அக்டோபரில் காலாவதியானது. அடுத்த 3 ஆண்டுக்கு வாடகை நிர்ணயம் குறித்து பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டன.
சென்னையில் நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை இதையடுத்து வெள்ளிக்கிழமை முதல் எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தென்மண்டல டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் இடையே போடப்பட்ட புதிய ஒப்பந்தத்தில் டேங்கர் லாரிகளுக்கான வாடகை நிர்ணயம் குறித்து 3 கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இந்த பேச்சு வார்த்தைகளில் உடன்பாடு எட்டப்படாததை அடுத்து 30ஆம் தேதி நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக தென்மண்டல டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.இந்த வேலை நிறுத்தத்தில் தமிழகம் முழுவதும் 3,200 டேங்கர் லாரி உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த நவம்பர் 1ஆம் தேதி எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் டெண்டரில் பங்கேற்ற அனைத்து லாரிகளுக்கும் வேலைவாய்ப்பு அளிக்கவேண்டும் எனக்கோரி திடீர் வேலை நிறுத்தத்தில் குதித்தனர். ஆனால் ஒரே நாளில் இந்த போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது. தற்போது மீண்டும் வேலைநிறுத்தத்தில் டேங்கர் லாரி உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சிலிண்டர் தட்டுப்பாடு அபாயம்
தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுவை ஆகிய 5 மாநிலங்களில் சமையல் எரிவாயு லோடு ஏற்றி செல்லும் பணியில் நாமக்கல் லாரிகள் ஈடுபட்டு வருகின்றன. இந்த வேலைநிறுத்தம் தொடர்ந்து நீடித்தால் 5 மாநிலங்களிலும் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும்.