டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்! சென்னை பேச்சுவார்த்தையில் உடன்பாடு!!
சென்னை: வாடகை ஒப்பந்தத்தை புதுப்பிக் கோரி கடந்த 5 நாட்களாக நீடித்து வந்த டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் இன்று வாபஸ் பெறப்பட்டது. சென்னையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து வேலை நிறுத்தம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனால் சமையல் கியாஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற அபாயம் நீங்கியுள்ளது.
நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு தென்மண்டல மொத்த சமையல் கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. இச் சங்கத்தின் கீழ் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி என 5 மாநிலங்களில் சமையல் கியாஸ் டேங்கர் லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த லாரிகள் மத்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுடன் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கான ஒப்பந்த காலம் கடந்த ஆண்டு அக்டோபர் 31-ந் தேதியுடன் முடிவடைந்தது.
இதையடுத்து புதிய வாடகை ஒப்பந்தம் செய்வது தொடர்பாக எண்ணெய் நிறுவன அதிகாரிகள் மற்றும் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் இடையே நடைபெற்ற 3 கட்ட பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஏற்படாததால் கடந்த 30-ந் தேதி நள்ளிரவு முதல் தென்மண்டல மொத்த சமையல் கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் காரணமாக 3,200-க்கும் மேற்பட்ட சமையல் கியாஸ் டேங்கர் லாரிகள் இயக்கப்படவில்லை.
இதனால் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சிலிண்டரில் நிரப்பும் மையங்களுக்கு கியாஸ் எடுத்து செல்லும் பணி அடியோடு பாதிக்கப்பட்டது. இதனால் சிலிண்டரில் கியாசை அடைக்கும் பணி முடங்கியது.
இதே நிலை நீடித்தால் தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சமையல் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவானது. இப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நேற்று முன்தினம் சென்னை எழிலகத்தில் அரசு தரப்பில் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், தென்மண்டல மொத்த சமையல் கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் வேலைநிறுத்த போராட்டம் தொடரும் என அறிவித்தனர்.
அதன்படி நேற்று 4-வது நாளாக வேலைநிறுத்த போராட்டம் நீடித்தது. இதற்கிடையே இந்த போராட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க நாமக்கல்லில் நேற்று தென்மண்டல மொத்த சமையல் கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களின் அவசர செயற்குழு கூட்டம் கூடியது.
பின்னர் சங்கத்தின் தலைவர் நடராஜன், செயலாளர் கார்த்திக் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசுகையில். சென்னையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் புதிய வாடகை நிர்ணயம் செய்யும் கமிட்டியில் அங்கம் வகிக்கும் அதிகாரிகள் எவரும் பங்கேற்கவில்லை. எனவே பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. தற்போது அரசு தரப்பில் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது என்றார்.
பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையிலும் 5வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டம் இன்று தொடர்ந்தது. சென்னை எழிலகத்தில் இன்று நடந்த பேச்சுவார்த்தையில் பிற்பகல் வரை எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படாமல் இருந்தது. பின்னர் மாலையில் நீடித்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் தங்களது வேலை நிறுத்தத்தை விலக்கிக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.
முன்னதாக டேங்கர் லாரிகள் ஸ்டிரைக் தொடர்ந்தால் சமையல் கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க தமிழக அரசுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இந்திய ஆயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.