எல்.பி.ஜி டேங்கர் லாரிகள் நள்ளிரவு முதல் ஸ்டிரைக்: சமையல் எரிவாயு தட்டுப்பாடு அபாயம்
சென்னை: சமையல் எரிவாயு டேங்கர் லாரி உரிமையாளர்கள் நள்ளிரவு முதல் காலவரைற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவுசெய்துள்ளனர். அதனால், தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
மத்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான ஐ.ஓ.சி, பி.பி.சி, எச்.பி.சி ஆகிய 3 நிறுவனங்கள், நாடு முழுவதும் சமையல் எரிவாயு வினியோகம் செய்து வருகின்றன.
எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சிலிண்டர்களில் காஸ் நிரப்பும் மையங்களுக்கு, சமையல் எரிவாயுவை எல்.பி.ஜி டேங்கரில் கொண்டு செல்லப்படுகின்றன.
நாமக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு தென் மண்டல சமையல் எரிவாயு டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. 4 ஆயிரம் டேங்கர் லாரிகள் இயங்கி வருகின்றன.
கடந்த சில மாதங்களுக்கு முன், அடுத்த 3 ஆண்டுக்கான இடெண்டர் முறையை ஆயில் நிறுவனங்கள் அறிவித்தன. இதில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால், பழைய மாடல் வண்டிகள் டெண்டரில் பங்கேற்க முடியாத நிலையும் உருவானது.
அதன்படி 3200 வண்டிகளுக்கு இடெண்டர் முறையில் ஒர்க் ஆர்டர் அளிக்க உள்ளது. தற்போது இடெண்டரில் பங்கேற்ற 38 வாகனங்களுக்கு ஒர்க் ஆர்டர் தரமுடியாது. அந்த வாகனங்களின் உரிமையாளர்கள், சில ஆவணங்களை இணைக்கவில்லை என ஆயில் நிறுவன அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதற்கு டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், ஆயில் நிறுவனங்களின் முடிவை எதிர்த்து இன்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவும் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து, அனைத்து உறுப்பினர்களுக்கும் நேற்று எஸ்.எம்.எஸ் அனுப்பப்பட்டுள்ளது.
டேங்கர் லாரி- எண்ணெய் நிறுவனங்களுடனான ஒப்பந்தம் அக்டோபர் 31-ம் தேதியுடன் நிறைவுபெற்றது. 3,200 லாரி உரிமையாளர்கள் விண்ணப்பித்ததில் 3,108 வாகனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. விண்ணப்பத்தில் சில குறைபாடுகள் இருந்ததாகக் கூறி 38 லாரிகளுக்கு ஒப்பந்தம் மறுக்கப்பட்டதை அடுத்து, இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். இதனால் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.