நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு- நெல்லைக்கு 11 கம்பெனி துணை ராணுவம்
நெல்லை: நாடாளுமன்ற தேர்தலை ஓட்டி நெல்லைக்கு 11 கம்பெனி துணை ராணுவம் வருகிறது என மாவட்ட எஸ்பி நரேந்திரன் நாயர் தெரிவித்தார்.
தமிழகத்தில் இதற்கு முன் நடந்த தேர்தல்களில் வன்முறையில் ஈடுபட்டவர்கள், வாக்கு சாவடிகளில் மோதலில் ஈடுபட்டவர்கள் பற்றிய விபரங்களை சேகரிக்க தேர்தல் கமிஷனர் உத்தரவிட்டுள்ளது.
இதனால் அவர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது. மேலும் ரவுடிகள், சட்டம் ஓழுங்கு பிரச்சனையை ஏற்படுத்துபவர்கள் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க அவர்களது பட்டியலும் தயார் செய்யப்பட்டு வருகிறது.
குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வந்தவர்கள், தலைமறைவாக உள்ள ரவுடிகள் தேர்தல் நேரத்தில் வன்முறையில் ஈடுபடலாம் என்பதால் அவர்களை முன்னேச்சரிக்கையாக கைது செய்து பாதுகாப்பு சட்டப்பிரிவு 110ன் படி ஆர்டிஓ முன்பு ஆஜர்படுத்தி இனி தவறு செய்ய மாட்டோம் என்று பிணை ஜாமீன் வாங்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து நெல்லை மாவட்ட எஸ்பி நரேந்திரன் நாயர் கூறுகையில், தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி தேர்தல் அமைதியாக நடப்பதற்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும், காவல் துறை செய்து வருகிறது.
மாவட்டம் முழுவதும் ரவுடிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. தேர்தல் நேரத்தில் வன்முறை மற்றும் கலவரத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக துணை ராணுவத்தை சேர்ந்த 11 கம்பெனிகள் வருகிறது என்று அவர் தெரிவித்தார்.