40 தொகுதிகளிலும் பிரச்சாரம் தொடங்கிய அதிமுக வேட்பாளர்கள்: கலக்கத்தில் சிபிஎம், சிபிஐ
சென்னை: லோக்சபா தேர்தலுக்கான பிரச்சாரத்தை அதிமுகவின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா நேற்று பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.
அதே நேரத்தில் 40 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் பிரச்சாரத்தை தொடங்கினர். இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள இரண்டு கம்யூனிட்களுக்கு சீட் உண்டா, இல்லையா என்ற குழப்பம் தொண்டர்களிடையே ஏற்பட்டுள்ளது.
தனித்து போட்டி
நாடாளுமன்ற லோக்சபா தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக முதலில் அதிமுக அறிவித்தது. அந்த சூழ்நிலையிலும் நாடாளுமன்றத் தேர்தலின் போது கூட்டணியில் இணைந்த கம்யூனிஸ்ட்கள் அதிமுகவை விட்டு விலகவில்லை.
கம்யூனிஸ்ட்களுடன் கூட்டணி
இதனைத் தொடர்ந்து அதிமுக தலைமையிலான கூட்டணியில் மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து போட்டியிடும் என்று ஜெயலலிதாவே அறிவித்தார்.
கூட்டணி பேச்சுவார்த்தை
இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் 3 பேர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன் தலைமையில் 3 பேர் அடங்கிய குழுவினர், கடந்த 5ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்து தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சு பேச்சாத்தான் இருக்கு
முதல் கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்து 4 வாரங்கள் முடிந்தும் இன்னும் 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.
40 தொகுதிகளிலும் வேட்பாளர்கள்
இந்நிலையில், கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுப்பதற்கு முன்பே, தமிழகம் மற்றும் புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பெயர்களை கடந்த 24ம் தேதி ஜெயலலிதா அறிவித்தார்.
கூட்டணியினருடன் தொகுதி பங்கீடு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. தொகுதி உடன்பாடு ஏற்பட்ட பின்னர் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் நாடாளுமன்ற மக்கள் தொகுதிளில், அதிமுக வேட்பாளர்கள் திரும்ப பெற்றுக் கொள்ளப்படுவார்கள் என்று ஜெயலலிதா கடந்த 24ம் தேதி அறிவித்தார்.
ஜெயலலிதா அறிவித்து 10 நாட்கள் ஆகியும் இன்னும் கூட்டணி குறித்து இறுதி முடிவு ஏற்படவில்லை. இந்நிலையில், ஜெயலலிதா நேற்று முதல் தேர்தல் பிரசாரத்தையும் தொடங்கி விட்டார். 40 தொகுதியில் வேட்பாளர்களும் பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டனர்.
கம்யூனிஸ்ட்கள் ஏமாற்றம்
ஜெயலலிதா பிரசாரத்தை தொடங்குவதற்கு முன், கூட்டணி குறித்து முடிவு ஏற்பட்டு விடும் என்று கம்யூனிஸ்ட் தலைவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் நேற்று இரவு வரை அதிமுக தரப்பில் இருந்து எந்த அழைப்பும் வராததால் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தா.பாண்டியன் நம்பிக்கை
இதனிடையே திருவாரூரில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் தா.பாண்டியன், நாகை தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா என்று தொண்டர்களாகிய உங்களது உணர்வுகளை அறிந்தவன் நான் என்ற முறையில் இந்த தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிச்சயம் போட்டியிடும். அதற்கான வாய்ப்பினை நான் பெற்றுக் கொடுப்பேன் என்று தொண்டர்களுக்கு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அழைப்பில்லை – ஜி.ராமகிருஷ்ணன்
அதேசமயம் அதிமுக தரப்பில் இருந்து இந்த நிமிடம் வரை எந்த அழைப்பும், தகவலும் வரவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இழுத்தடிக்கும் அதிமுக
"அதிமுக கட்சிக்கு தொடர்ந்து 3 ஆண்டுகள் தமிழகத்தில் ஆதரவு கொடுத்து வருகிறோம். சட்டமன்றத்தில் எல்லா கட்சிகளும் ஆளுங்கட்சிக்கு எதிராக பேசியபோது இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் தொடர்ந்து ஆதரவாக குரல் கொடுத்து வருகிறோம். ஆனால் எங்களையே அதிமுக மதிக்காமல் இழுத்தடிக்கிறது'' என்று கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏ கூறியுள்ளார். அதிமுகவின் இந்த நடவடிக்கை கம்யூனிஸ்ட் தொண்டர்கள் இடையே கூட்டணி உண்டா, இல்லையா என்ற குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
சட்டமன்ற தேர்தலின் போது
2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது இதேபோன்ற சூழ்நிலைதான் ஏற்பட்டது. அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட உடன் கூட்டணியில் இருந்த தேமுதிக தலைமையினை கம்யூனிஸ்ட்கள் நாடினர். விஜயகாந்த் தலைமையில் புதிய கூட்டணி அமைக்க கம்யூனிஸ்ட்கள் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் இப்போதோ நிலைமை வேறு மாதிரி உள்ளது என்பதால் கம்யூனிஸ்ட்கள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.
நம்பிக்கை தந்த ஜெ.
அதேசமயம் கடந்த வியாழக்கிழமையன்று 40 தொகுதி எம்.பி வேட்பாளர்களையும் தனித்தனியாக சந்தித்து அதிமுக அரசின் சாதனைகள் அடங்கிய சிடிக்களை கொடுத்துள்ளார். அப்போது குரூப் போட்டோ எடுத்துக்கொண்ட ஜெயலலிதா, அதில் வடசென்னை, நாகை, கோவை, மதுரை வேட்பாளர்களை மட்டும் ஒதுக்கிவிட்டு 36 பேருடன் மீண்டும் ஒரு குரூப் போட்டோ எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதன்மூலம் அந்த நான்கு தொகுதிகளும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குத்தான் என்று நம்பிக்கை மறைமுக அளித்துள்ளார் ஜெயலலிதா என்கிறார்கள் காம்ரேடுகள்.