செல்போன் மூலம் வாக்காளர்களை அட்டாக் செய்யும் வேட்பாளர்கள்… புது ட்ரெண்ட்
சென்னை: தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் இறுதிக் கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில், முக்கிய தலைவர்கள் பலர் செல்போன் மூலம் வாக்குச் சேகரித்து வருகின்றனர்.
முதல்வர் ஜெயலலிதா செல்போன் மூலம் வாக்கு சேகரிப்பது தெரிந்த விசயம்தான். செல்போனில் முதல்வர் ஜெயலலிதாவின் பதிவு செய்யப்பட்ட பேச்சு வருகிறது.
இதில் திமுகவுக்கு மரணஅடி கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடும் முதல்வர் நாற்பது தொகுதிகளிலும் அதிமுகவை ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறார்.
இதேமுறையைப் பயன்படுத்தி தற்போது பல வேட்பாளர்களும், முக்கியத்தலைவர்களும் வாக்கு சேகரித்து வருகின்றனர்.
தென் சென்னை
தென் சென்னையில் திமுக சார்பில் டி.கே.எஸ். இளங்கோவனும், அதிமுக சார்பில் முன்னாள் சபாநாயகர் டி.ஜெயக்குமாரின் மகனான டாக்டர் ஜெயவர்தனனும், பா.ஜ.க சார்பில் இல.கணேசனும், போட்டியிடுகின்றனர்.
திமுக வேட்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், வாக்காளர்களிடம் பதிவு செய்யப்பட்ட வாய்ஸ் மூலம் செல்போனில் ஓட்டு வேட்டை நடத்தினார். அத்துடன் எஸ்.எம்.எஸ். மூலமாகவும் வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்தார்.
இதனைத் தொடர்ந்து அதிமுகவின் ஜெயவர்தனன், பாஜகவின் இல. கணேசன் ஆகியோரும் செல்போன் ஓட்டு வேட்டை யுக்தியை கையாண்டனர்.
ஸ்ரீ பெரும்புதூரில்
ஸ்ரீ பெரும்புதூர் தொகுதியில் அதிமுக சார்பில் கே.என்.ராமச்சந்திரனும், திமுக சார்பில் ஜெகத்ரட்சகனும், மதிமுக சார்பில் மாசிலாமணியும் போட்டியிடுகின்றனர். இவர்கள் எஸ்எம்எஸ் மூலம் வாக்கு சேகரித்துள்ளனர்.
திருநெல்வேலியில்…
நெல்லை தொகுதியில் அதிமுக சார்பில் பிரபாகரனும், திமுக சார்பில் தேவதாச சுந்தரமும், காங்கிரஸ் சார்பில் ராமசுப்புவும் போட்டியிடுகின்றனர். மூன்று பேரும் பசையான வேட்பாளர்கள் என்பதால் செல்போன், எஸ்எம்எஸ், என வாக்காளர்களை அட்டாக் செய்கின்றனர்.
விழுப்புரம்
விழுப்புரம் தொகுதியில் அதிமுக சார்பில் ராஜேந்திரனும், திமுக சார்பில் கோபாலும், தேமுதிக சார்பில் உமாசங்கர் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த மூன்று வேட்பாளர்களுமே களத்தில் நேரடியாக வேட்பாளர்களை சந்தித்தாலும் செல்போன் மூலமும் எஸ்எம்எஸ் அனுப்பி வாக்கு சேகரிக்கின்றனராம்
திருவண்ணாமலை
திருவண்ணாமலை தொகுதியை பொருத்தவரை திமுக பிரசார வியூகம் அலாதியானதாக இருக்கிறது. திருவண்ணாமலை தொகுதியில் திமுக வேட்பாளர் சி.என். அண்ணாதுரை அதிமுக வேட்பாளர் வனரோஜா ஆகியோர் நான் வேட்பாளர் பேசுகிறேன்னு என்று செல்போன் மூலம் வாக்காளர்களை அட்டாக் செய்கின்றனர்.
வாக்காளர்கள் ரியாக்சன்
அதேசமயம், இந்தப் பிரசாரம் பல வாக்காளர்களை எரிச்சலடையச் செய்துள்ளதாம்.மதியம் தூங்குபவர்கள், செல்போன் ஒலித்ததும் முக்கியமான அழைப்பு என நினைத்து வேகமாக எடுத்தால், வணக்கம் என எதிர்முனையில் ஒலிக்கும் குரலை கேட்டதும் எரிச்சலுடன் மேலும் கேட்காமல் தொடர்பைத் துண்டித்து விடுகின்றனர்.
உடனே ‘கட்’தான்
இதில் வாகன ஓட்டிகளின் நிலைமையோ பரிதாபம். மாநகரத்தின் வாகன நெரிசல் நிறைந்த சாலைகளில் செல்லும்போது செல்போன் மணி அடிக்கிறது, வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு ஹெலோ சொன்னால், "வணக்கம் எங்கள் சாதனை' எனத் தொடங்கும்போதே செல்போன் இணைப்பைத் துண்டித்து விடுகின்றனர் என்கின்றனர் அனுபவப்பட்டவர்கள்.
எஸ்எம்எஸ்-ல் நினைவூட்டல்
தமிழகத்தில் முதல்முறையாக, வாக்குப்பதிவுக்கு முந்தைய தினம், ‘கண்டிப்பாக வாக்களியுங்கள்' என்றும், வாக்குப்பதிவு தினத்தன்று காலை 10 மணி மற்றும் மாலை 4 மணிக்கு, ‘வாக்களித்து விட்டீர்களா' என்றும் தேர்தல் ஆணையம் செல்போன்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப உள்ளது குறிப்பிடத்தக்கது.