பிரபாகரன் பிறந்தநாளை கொண்டாட முருகன், சாந்தன், பேரறிவாளனுக்கு தடை!
வேலூர்: விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளை கொண்டாட ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள கைதிகள் கேட்ட அனுமதியை வேலூர் சிறை நிர்வாகம் தர மறுத்துள்ளது.
தமிழீழ விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனின் 60வது பிறந்த தினம் இன்று. இந்த பிறந்த நாளை மாவீரர் நாளாக கொண்டாட தமிழ் உணர்வு அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.
இந்நிலையில், முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில், தூக்கு தண்டனை பெற்று பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, இயக்கத்தை சேர்ந்த முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் பிரபாகரன் பிறந்தநாளை கொண்டாட அனுமதி கேட்டிருந்தனர்.
சிறை அதிகாரிக்கு இவர்கள் அளித்த மனுவை பரிசீலித்த உயர் அதிகாரிகள், சிறைக்குள் பிரபாகரன் பிறந்த நாளை கொண்டாட அனுமதி மறுத்துள்ளனர். விடுதலை புலிகள் இயக்கத்திற்கு இந்தியாவில் இன்னும் தடை நீடிப்பதால் இதுபோன்ற முடிவை போலீசார் எடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.