இந்தியாவில் தோன்றிய அபூர்வ முழு சந்திர கிரகணம்.. மொட்டைமாடிகளில் நின்று ரசித்த மக்கள்!
இந்தியாவில் தோன்றிய அபூர்வ சந்திர கிரகணத்தை ஏராளமான மக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.
சென்னை: இந்தியாவில் தோன்றிய அபூர்வ சந்திர கிரகணத்தை மொட்டைமாடிகளில் நின்று மக்கள் ரசித்து வருகின்றனர்.
152 ஆண்டுகளுக்கு பிறகு மூன்று அரிய நிகழ்வுகளுடன் இன்று அபூர்வ சந்திர கிரகணம் தோன்றியுள்ளது. இதனை வெறும் கண்களாலேயே மக்கள் காணலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதனை முன்னிட்டு சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் சந்திர கிரகணத்தை காண சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சந்திர கிரகணத்தை காண ஏராளமான மக்கள் அங்கு குவிந்துள்ளனர்.
மூன்று அரிய நிகழ்வுகள்
சந்திர கிரகணம், சூப்பர் நிலா, சிவப்பு நிலா என்ற மூன்று அரிய நிகழ்வுகளுடன் இந்த அபூர்வ சந்திர கிரகணம் நடைபெறுகிறது. மாலை 5.18 மணி முதல் 6.21 மணி வரை இந்த சந்திர கிரகணம் நடைபெறும்.
பெரிய பிரகாசமான நிலா
இன்று சூப்பர் மூன் என்பதால் வழக்கமான பவுர்ணமி நாட்களை விட இன்று நிலவு 14 சதவீதம் பெரியதாக தோன்றும். அதேபோல் வழக்கத்தை விட 30 சதவீதம் பிரகாசமாகவும் நிலவு காட்சியளிக்கும்.
கடல் அலை..
இந்த சந்திர கிரகணம் ராஜஸ்தான் உள்ளிட்ட மேற்கு மாநிலங்களில் மாலை 6.21 மணி முதல் 7.37 வரை பார்க்கலாம். சந்திர கிரகணத்தை முன்னிட்டு கடலில் அலையின் வேகம் வழக்கத்தை விட பெரியதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே மாதத்தில் 2 பவுர்ணமி
நீல நிலா என்பது ஒரே மாதத்தில் இரண்டு முறை பவுர்ணமி வருவதாகும். கடந்த ஒன்றாம் தேதி பவுர்ணமி தோன்றிய நிலையில் ஜனவரி மாதத்தில் இன்று மீண்டும் பவுர்ணமி வந்துள்ளது.
இனி 2028ல் தான்..
சந்திர கிரகணத்தை காண சென்னை மெரினா கடற்கரை உள்ளிட்ட இடங்களிலும் மக்கள் திரண்டுள்ளனர். இதுபோன்று ஒரு சந்திர கிரகணத்தை இனி 2028ஆம் ஆண்டில் தான் மீண்டும் காணமுடியும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.