பிளஸ்-2 மாணவியின் விடைத்தாள் மாறிய விவகாரம்- விசாரணைக்கு உத்தரவு: கல்வி அமைச்சர் வீரமணி
சென்னை: கிருஷ்ணகிரியைச் சேர்ந்த கவிதாமணி என்ற மாணவியின் விடைத்தாள் மாறியதில் அவர் பிளஸ்-2 தேர்வில் தோல்வியடைந்த விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வீரமணி தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரியைச் சேர்ந்த மாணவி கவிதாமணி. இந்த வருடம் பிளஸ்-2 தேர்வினை நன்கு எழுதியிருந்த இவருக்கு கடந்த மாதம் வெளியான தேர்வு முடிவுகள் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. பொருளியல் பாடத்தில் அவர் தோல்வி அடைந்திருந்தார்.
ஏழ்மையான குடும்பத்தினைச் சேர்ந்த அம்மாணவி உடனடியாக விடைத்தாளுக்கு விண்ணப்பித்திருந்தார். விடைத்தாள் பெற்று பார்த்தபோதுதான் அவருடைய பொருளியல் விடைத்தாள் மாறியிருந்தது தெரிய வந்தது. அவருடைய கையெழுத்தில் இல்லாத விடைத்தாளைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதனையடுத்து இவ்விடைத்தாள் மாற்றம் குறித்து கவிதாமணி பள்ளிக் கல்வித்துறையில் புகார் அளித்தார். இவ்விவகாரம் குறித்து பதிலளித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வீரமணி மாணவியின் விடைத்தாள் மாறியது குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மாணவியின் பொருளியல் விடைத்தாள் திருத்தப்பட்ட ஆம்பூரில் இருக்கலாம் என்றும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.