குடிபோதையில் கார் ஓட்டிய டிரைவர்- சென்னையில் சொகுசு கார் தலைகீழாக கவிழ்ந்து விபத்து
சென்னையில் டிஜிபி அலுவலகம் அருகே சொகுசு கார் ஒன்று தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த பெண்ணுக்கு சிறு காயம் ஏற்பட்டது.
சென்னை: சென்னையில் மதுபோதையில் காரை ஓட்டிவந்து விபத்தில் சிக்குவது அதிகரித்துள்ளது. களங்கரை விளக்கம் ரயில் நிலையம் அருகே சொகுசு கார் ஒன்று தலைகீழாக கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.
சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில், டி.ஜி.பி. அலுவலகம் எதிரே நள்ளிரவு சொகுசு கார் ஒன்று அதிவேகத்தில் வந்தது. திடீரென கட்டுபாட்டை இழந்த கார், சாலை நடுவே உள்ள தடுப்பில் மோதி தலைகீழாக கவிழ்ந்தது.
இந்த விபத்தில் காரில் இருந்த 3 பெண்களில், காரை ஓட்டி வந்தவருக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அந்த பெண்ணை அவரது நண்பர்கள் மற்றொரு காரில் ஏற்றிகொண்டு, போலீசார் வருவதற்கு முன் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த அடையாறு போக்குவரத்து போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விபத்தை ஏற்படுத்திய பெண் யார், என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் நள்ளிரவில், அப்பகுதியில் தொடர்ந்து மதுபோதையில் அடிக்கடி கார் விபத்து ஏற்படுவதாக குற்றம்சாட்டினார்.
சென்னையில் குடி போதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றனர். இதனால் உயிர் பயத்தில் உறைந்துள்ளனர் அப்பாவி பொதுமக்கள்
சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களிலும், கிழக்குக் கடற்கரைச்சாலைகளில் உள்ள ரிசார்ட்களிலும் வார விடுமுறை நாள் பார்ட்டிகள் அதிகம் நடைபெறுகின்றன.
இந்த பார்ட்டிகளில் பங்கேற்கும் பிரபலங்கள், வசதிபடைத்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த வாரிசுகள் குடித்து விட்டு போதையில் கார் ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்துகின்றனர்.
தரமணியில் ஆடி கார் ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய ஐஸ்வர்யா முதல், நடிகர் அருண் விஜய், போர்சே காரை குடிபோதையில் ஓட்டி வந்து டிரைவர் உயிரை பறித்த விகாஷ் வரை இப்போது ஜாமீனில் வெளியே சுற்றிக்கொண்டுள்ளனர்.
சமீபத்தில் நடிகர் ஜெய் குடிபோதையில் காரை ஓட்டிவந்து விபத்தை ஏற்படுத்தினார். இதற்காக அபராதமும் கட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.