லைக்காவிற்கு எதிராக வேல்முருகன் பேச்சாம்… ரூ. 10 கோடி நஷ்டஈடு கேட்டு ஐகோர்ட்டில் வழக்கு
லைக்கா நிறுவனத்திற்கு எதிராக வேல்முருகன் பேசியதாகக் கூறி, சென்னை ஐகோர்ட் மற்றும் எழும்பூர் நீதிமன்றத்தில் லைக்கா நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. அதில் 10 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு மனு செய்துள்ளது லைக
சென்னை: லைக்கா நிறுவனம் குறித்த தனது பேச்சிற்காக வேல்முருகன், 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று கோரி லைக்கா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்திலும் எழும்பூர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளது.
இலங்கையில் போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வீடு கட்டித் தரும் நிகழ்ச்சி வவுனியாவில் வரும் 10ஆம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டது. பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனமான லைக்கா ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சியில் தமிழ் திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்ள அழைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மதிமுக தலைவர் வைகோ மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆகியோர் ரஜினியின் இலங்கை பயணத்தை எதிர்த்து அறிக்கை வெளியிட்டனர். மேலும், ரஜினிகாந்த் இலங்கை செல்லக்கூடாது என்றும் கேட்டுக் கொண்டனர்.
லைக்கா கண்டனம்
தமிழக அரசியல் கட்சித் தலைவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ரஜினிகாந்த், தனது இலங்கை பயணத்தை ரத்து செய்தார். இதற்கு லைக்கா நிறுவனம் கடுமையான கண்டனத்தை அரசியல் கட்சிகளுக்கு தெரிவித்தது.
வேல்முருகன் குற்றச்சாட்டு
இதனிடையே, கடந்த 25ம் தேதி தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் வேல்முருகன் கலந்து கொண்டார். அதில், ராஜபக்சேவிற்கும் லைக்கா நிறுவனத்திற்கும் தொடர்பிருப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.
மானநஷ்ட நோட்டீஸ்
இதனைக் கண்டித்த லைக்கா நிறுவனம், வேல்முருகன் மீது மானநஷ்ட நோட்டீஸ் அனுப்பியது. வேல்முருகனின் பேச்சால் வியாபாரத்திற்கு நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகவும், எனவே 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.
ஐகோர்ட்டில் வழக்கு
இந்நிலையில், இன்று சென்னை உயர்நீதிமன்றத்திலும் எழும்பூர் நீதிமன்றத்திலும் வேல்முருகனுக்கு எதிராக மனு ஒன்றை லைக்கா நிறுவனம் தாக்கல் செய்துள்ளது. இதில் வேல்முருகனின் கருத்தால் தங்களது வியாபாரம் பாதிக்கப்பட்டிருப்பதால் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.